சென்னை: ஜெயலலிதாவின் இல்லத்தை கையகப்படுத்தும் நடவடிக்கையை கைவிடுவதாக தமிழக அரசு நீதிமன்றத்தில் தெரிவித்தது.
கடந்த அதிமுக ஆட்சிக் காலத்தில் சென்னையில் ஜெயலலிதா வாழ்ந்த வீட்டை நினைவு இல்லமாக மாற்றி அரசு உத்தரவிட்டது. மேலும், வீட்டுக்கான இழப்பீட்டுத் தொகையாக சென்னை நீதிமன்றத்தில் ரூ.68 கோடி செலுத்தி இருந்தது.
எனினும் அரசின் இந்த முடிவை ஜெயலலிதாவின் சட்டபூர்வ வாரிசுகளான தீபக், தீபா ஆகிய இருவரும் எதிர்த்தனர். இதனால் அரசு பிறப்பித்த உத்தரவுகளை உயர் நீதிமன்றம் ரத்து செய்தது.
இந்த உத்தரவை எதிர்த்து அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் நீதிமன்றத்தை அணுகினார். இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தபோது, தமிழக அரசு சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில், ஜெயலலிதாவின் வேதா இல்லத்தை விலைக்கு வாங்க ஏதுவாக செலுத்தப்பட்ட ரூ.68 கோடி தொகையை திரும்பப் பெறுவதாகவும் கையகப்படுத்தும் நடவடிக்கையை கைவிடுவதாகவும் குறிப்பிடப்பட்டிருந்தது.

