விருதுநகர்: பண மோசடி வழக்கில் சிக்கியுள்ள முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜியிடம் காவல்துறை மீண்டும் விசாரணை நடத்தியுள்ளது. இதையடுத்து, அவர் மீதான பிடி இறுகி வருவதாகக் கூறப்படுகிறது.
அரசுப் பணி வாங்கித் தருவதாகக் கூறி, மூன்று கோடி ரூபாய் பெற்றுக்கொண்டு மோசடி செய்ததாக ராஜேந்திர பாலாஜி மீது வழக்கு பதிவாகி உள்ளது.
இதையடுத்து தலைமறைவான அவர், பின்னர் நீதிமன்றத்தை அணுகி பிணை பெற்றுள்ளார். கடந்த 12ஆம் தேதி விருதுநகர் குற்றப்பிரிவு காவல்துறை அதிகாரிகள் அவரிடம் சுமார் 11 மணி நேரம் விசாரணை நடத்தினர்.
அப்போது 134 கேள்விகள் அவரிடம் கேட்கப்பட்டதாகவும் அதன் மூலம் அவரது சொத்து விவரங்கள், நெருக்கமான வட்டத்தில் இருப்பவர்கள் குறித்த விவரங்கள் சேகரிக்கப்பட்டதாகவும் தெரிகிறது.
எனினும், 40 கேள்விகளுக்கு அவர் அளித்த பதில்கள் முன்னுக்குப் பின் முரணாக இருந்ததாகக் கூறப்படுகிறது.
இதையடுத்து, ராஜேந்திர பாலாஜியிடம் நேற்று முன்தினம் மீண்டும் விசாரணை நடத்தப்பட்டது.
இம்முறையும் பல மணி நேரம் நீடித்த விசாரணையின்போது, பல்வேறு கிடுக்கிப்பிடி கேள்விகள் கேட்கப்பட்டன என்றும் அதற்கு அவர் அளித்த பதில்கள் அனைத்தும் ஆவணமாகப் பதிவு செய்யப்பட்டுள்ளன என்றும் ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அடுத்தடுத்து நடத்தப்பட்டுள்ள விசாரணைகள் காரணமாக ராஜேந்திர பாலாஜி மீதான காவல்துறையின் பிடி மேலும் இறுகி உள்ளதாகக் கூறப்படுகிறது.
மேலும் இவ்வழக்கில் காவல்துறை விரைவில் அடுத்தகட்ட நடவடிக்கையை எடுக்க வாய்ப்புள்ளதாகவும் தமிழக ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

