சென்னை: அரசின் வழிகாட்டு நெறிமுறைகளைப் பொதுமக்கள் தொடர்ந்து பின்பற்றியதால் தமிழகத்தில் கொரோனா தொற்றுப் பரவல் குறைந்துள்ளதாக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
வரும் நாள்களில் மேலும் சில தளர்வுகள் அறிவிக்கப்பட வாய்ப்புள்ள நிலையில், மக்கள் அலட்சியமாக இருந்துவிடக் கூடாது என அவர் வலியுறுத்தி உள்ளார்.
"மாநிலம் முழுவதும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு என மருத்துவமனைகளில் சுமார் 130,000 படுக்கைகள் ஒதுக்கப்பட்டுள்ளன. எனினும் அவற்றில் 2,800 படுக்கைகள் மட்டுமே பயன்பாட்டில் உள்ளன.
"மேலும். தீவிர சிகிச்சைப் பிரிவில் இருப்பவர்களின் எண்ணிக்கையும் 440ஆகக் குறைந்துள்ளது. எனவே கட்டுப்பாடுகள் தளர்த்தப்படலாம். அதன் பிறகும் சில மாதங்களுக்கு அரசின் நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை பொதுமக்கள் கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டும்," என்று ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.
தமிழகத்தில் இன்னும் 11.3 மில்லியன் பேர் இரண்டாவது தடுப்பூசி போட்டுக்கொள்ளவில்லை என்றும் 18 வயதுக்கு மேற்பட்ட 4 மில்லியனுக்கும் அதிகமானோர் இன்னும் முதல் தடுப்பூசிகூட போட்டுக்கொள்ளவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையே, தமிழகத்தில் நேற்று முன்தினம் புதிதாக 1,325 பேருக்கு கிருமி தொற்றியது உறுதியானது. மேலும் 14 பேர் மாண்டுவிட்டனர்.

