சென்னை: கூடங்குளம் அணுமின் நிலைய வளாகத்தில் பயன்பாடு முடிந்த அணு எரிபொருள் கழிவுகளைச் சேகரிக்கும் மையத்தை அமைக்க தமிழக அரசு எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
தமிழக மக்களின் பாதுகாப்பு, சுகாதாரம், நலனைக் கருத்தில் கொண்டு இந்நடவடிக்கையை மத்திய அரசு கைவிட வேண்டும் என்று வலியுறுத்தி பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதி உள்ளார் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்.
இது தொடர்பாக பொது மக்களிடையே உள்ள கவலையை பிரதமரின் கவனத்துக்குக் கொண்டு வந்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
"பயன்பாடு முடிந்த அணு எரிபொருள் கழிவுகளை, அணுமின் நிலைய வளாகத்திற்குள், அணு உலைக்கு அப்பால் சேமித்து வைப்பதால் ஏற்படும் அபாயங்கள், ஆபத்துகள் தொடர்பான சாத்தியக் கூறுகள் குறித்து பல்வேறு அரசியல் கட்சிகள் உட்பட தமிழக மக்களின் ஆழ்ந்த கவலையையும் அச்சத்தையும் பகிர்ந்துகொள்கிறோம்.
"சுற்றுச்சூழல், அத்தகைய ஆலைப் பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு இது பேரழிவினை ஏற்படுத்திட வழிவகுத்திடும். மேலும், அப்பகுதியில் உள்ள மக்கள் தங்களுக்கு ஏற்படும் பாதிப்புகள் குறித்து அச்சம் கொண்டுள்ளனர்.
"அதன் காரணமாக மத்திய அரசின் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து போராடி வருகின்றனர்," என்று முதல்வர் ஸ்டாலின் கூறிஉள்ளார்.
பயன்பாடு முடிந்த அணு எரிபொருள் கழிவுகளை மீண்டும் ரஷ்யாவுக்கே கொண்டு செல்ல நடவடிக்கை மேற்கொள்ளலாம் என்று குறிப்பிட்டுள்ள அவர், அது சாத்தியப்படாவிடில், மக்கள் வசிக்காத, சூழலியல் பாதிப்பு இல்லாத பகுதியில், நிலத்தடி ஆழ்நிலை கிடங்கு அமைத்து, பயன்பாடு முடிந்த அணு எரிபொருள் கழிவுகளை நிரந்தரமாக சேமித்து வைக்கலாம் என தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் உள்ள எட்டு கோடி மக்களின் சார்பாக இந்த வேண்டுகோளை தாம் முன்வைப்பதாக முதல்வர் தமது கடிதத்தில் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

