சென்னை: கலைப்பொருள்கள் விற்கும் அங்காடியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த பல கோடி ரூபாய் மதிப்புள்ள சிலைகளை (படம்) சென்னை காவல்துறை கைப்பற்றி உள்ளது.
உலோக நடராஜர், கண்ணன் சிலைகள் மீட்கப்பட்டுள்ளதாகவும் பௌத்த மத மந்திரங்கள் அடங்கிய பேழைகளும் கிடைத்துள்ளன என்றும் சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு காவலர்கள் தெரிவித்தனர்.
அக்குறிப்பிட்ட அங்காடியில் தொன்மையான கோவில் சிலைகள் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாகக் கிடைத்த தகவலை அடுத்து காவல்துறையினர் அங்கு சோதனை நடவடிக்கை மேற்கொண்டனர். அப்போது இரண்டு அடி உயரம் கொண்ட திருவாட்சியுடன் கூடிய நடராஜர் சிலை உள்ளிட்ட பல சிலைகள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பது தெரியவந்தது.
இதுகுறித்து அங்காடி நிர்வாகிகளிடம் விசாரணை நடத்தப்பட்டது. எனினும் அச்சிலைகள் எங்கிருந்து அனுப்பப்பட்டன, அவற்றை அனுப்பியது யார் என்பன போன்ற விவரங்கள் அவர்களுக்குத் தெரிந்திருக்கவில்லை.
மேலும், சட்டபூர்வமான ஆவணங்களும் இல்லாததால் அச்சிலைகள் பறிமுதல் செய்யப்பட்டன. இந்நிலையில், அவை அனைத்துமே பல்வேறு இடங்களில் இருந்து திருடப்பட்டவை என்பது உறுதியாகி உள்ளது.
இவற்றின் தொன்மை, மதிப்பு குறித்து வல்லுநர்களிடம் கலந்தாலோசிக்கப்படும் என்றும் எந்த கோவில்களில் இருந்து திருடப்பட்டவை என்பது குறித்து விசாரிக்கப்படும் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர். முதற்கட்ட விசாரணையின் மூலம் அச்சிலைகள் பலகோடி ரூபாய் மதிப்புள்ளவை எனத் தெரியவந்துள்ளது.

