ஒசூர்: ஓசூர் அருகே உள்ள டி.கொத்தப்பள்ளி கிராமத்தில் பழமைவாய்ந்த தர்மராஜா கோயில் உள்ளது. இக்கோயிலின் குடமுழுக்கு விழாவில் ஹெலிகாப்டர் மூலம் மலர்கள் தூவி வழிபாடு நடத்தியுள்ளனர்.
இந்தக் கோயிலில் கடந்த சில ஆண்டுகளாகவே மூன்றரை கோடி செலவில் கோயில் கோபுரங்கள் உள்ளிட்ட கட்டுமானப் பணிகள் நடந்து முடிந்ததைத் தொடர்ந்து மஹா குடமுழுக்கு நடைபெற்றுள்ளது.
இதையடுத்து, பெங்களூருவில் இருந்து வரவழைக்கப்பட்ட ஹெலிகாப்டரில் இருந்து மலர்கள் கோயிலின் கோபுரக் கலசங்கள் மீது தூவப்பட்டன.
ஹெலிகாப்டர் கோயிலைச் சுற்றி பல முறை வட்டமடித்து மலர்களைக் கோபுரத்தின் மேல் தூவின. இந்த குடமுழுக்கு விழாவில் டி.கொத்தப்பள்ளி உள்ளிட்ட சுற்றுப்புற கிராமங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான மக்கள் கலந்துகொண்டு சுவாமியை வழிபட்டுச் சென்றனர்.

