தூத்துக்குடி: இலங்கைக்கு ரூ.20 கோடி மதிப்பிலான போதைப் பொருளைக் கடத்திச் சென்றபோது காவல்துறை அதிகாரிகளின் பிடி யில் எழுவர் சிக்கினர்.
தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் அருகேயுள்ள வேம்பார் கடற்கரைப் பகுதியில் இருந்து இலங்கைக்கு நாட்டுப்படகு மூலம் போதைப்பொருள் கடத்தப்பட உள்ளதாக தூத்துக்குடி கியூ பிரிவு தனிப்படை காவல் துறை அதிகாரிகளுக்குத் தகவல் கிடைத்தது.
இதையடுத்து, சந்தேகத்திற்கு இடமாக ஒரு நாட்டுப்படகு விரைவாக கிளம்புவதைக் காவல் துறையினர் பார்த்தனர். காவல்துறையினரைக் கண்டதும் அந்த நாட்டுப்படகு அதிவேகமாக கடலுக்குச் செலுத்த தொடங்கி உள்ளது.
இதனால், அதிர்ச்சியடைந்த காவல்துறையினர் அவர்களை மடக்கிப் பிடிக்க விசைப்படகு மூலமாக நாட்டுப்படகை துரத்தியுள்ளனர். அத்துடன், ஜிபிஎஸ் கருவி மூலமாகவும் நாட்டுப்படகு இருக்கும் இடத்தைக் கண்டறிந்து அதனை சுற்றி வளைத்துள்ளனர்.
படகை பரிசோதித்ததில் 10 கிலோ கிரிஸ்டல் மெத்தாம்பேட்ட மைன் என்ற போதைப்பொருள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும், அவற்றை இலங்கைக்கு கடத்திச் சென்றதும் தெரியவந்தது.
இதையடுத்து, கீழவைப்பார், சிப்பிகுளம் உள்ளிட்ட பகுதியைச் சேர்ந்த இருதயவாஸ், கிங்கப்பன், சிலுவை, அஸ்வின், வின்ஸ்டன், கபிலன், சைமன் ஆகியோரை காவல்துறை ஆய்வாளர் விஜயாஅனிதா தலைமையிலான தனிப்படையினர் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 10 கிலோ கிரிஸ்டல் மெத்தாம்பேட்டமைன் போதைப்பொருளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

