வேலூர்: மதுரை மாவட்டம் மேலூர் நகராட்சி ஒன்பதாவது வார்டில் அதிமுக சார்பில் வெற்றி பெற்ற அருண் சுந்தர பிரபு, அமைச்சர் மூர்த்தி முன்னிலையில் தன்னை திமுகவில் இணைத்துக்கொண்டார்.
வெற்றி பெற்ற சில நிமிடங்களில் அதிமுகவைச் சேர்ந்த அருண் சுந்தர பிரபு திமுகவில் இணைந்தது மேலூர் பகுதி அதிமுகவினரை அதிர்ச்சியில் மூழ்கடித்துள்ளது.
ஆவடி மாநகராட்சி 14வது வார்டில் அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற வேட்பாளர் ராஜேஷும் நேற்று திமுகவில் இணைந்தார். தமிழக பால்வளத்துறை அமைச்சர் நாசரை நேரில் சந்தித்து அவர் திமுகவில் இணைந்தார்.
இதற்கிடையே கிருஷ்ணகிரி நகராட்சியை திமுக கைப்பற்றியதையடுத்து மூன்று சுயேட்சை வேட்பாளர்கள் திமுகவில் இணைந்தனர்.
கிருஷ்ணகிரி நகராட்சியில் உள்ள 33 வார்டுகளில் 23ல் வார்டுகளில் வெற்றிபெற்று திமுக நகராட்சியை கைபற்றியுள்ளது.
ஓரத்தநாடு பேரூராட்சியைக் கைப்பற்றிய அமமுக
தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள ஒரத்தநாடு பேரூராட்சியை அம்மா மக்கள் முன்னேற்றக்கழகம் கைப்பற்றியுள்ளது.
அங்கு மொத்தமுள்ள 15 வார்டுகளில் அமமுக ஒன்பது வார்டுகளைக் கைப்பற்றி வெற்றியைப் பதிவு செய்துள்ளது.
இதேபோல் திருச்சி மாநகராட்சியில் 47வது வார்டையும் அமமுக கைப்பற்றியது. அந்தக் கட்சியின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தேர்தல் பிரசாரம் மேற்கொள்ளவில்லை. ஒற்றை அறிக்கையோடு ஒதுங்கிக்கொண்டார். இந்நிலையில் ஒரு பேரூராட்சியில் வெற்றி பெற்றது அக்கட்சித் தொண்டர்களுக்கு உற்சாகம் அளித்துள்ளது.
குலுக்கலில் வென்ற சுயேச்சை
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு நகராட்சியில் குலுக்கல் மூலம் ஒரு சுயேச்சை வேட்பாளர் வெற்றிபெற்றதாக அறிவிக்கப்பட்டது.
அங்கு மொத்தம் 33 வார்டுகள் உள்ளன. இதில் 13வது வார்டில் போட்டியிட்ட சினேகா என்ற சுயேச்சையும் திமுக வேட்பாளர் ரேவதியும் வாக்கு எண்ணிக்கையின் முடிவில் 696 வாக்குகள் பெற்றிருந்தனர்.
இதையடுத்து தேர்தல் அலுவலர் இருவரது பெயரையும் தனித்தனியே ஒரு சீட்டில் எழுதி குலுக்கல் முறையில் வெற்றியாளரை தேர்வு செய்யப்போவதாக அறிவித்தார். அதன்படி நடத்தப்பட்ட குலுக்கலில் தண்ணீர் குழாய் சின்னத்தில் போட்டியிட்ட சினேகா வெற்றிபெற்றதாக அறிவிக்கப்பட்டது.

