சென்னை: நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் வெற்றிபெற்ற மற்ற கட்சிகளைச் சேர்ந்த சிலர் திமுகவில் இணைந்து வருகின்றனர். குறிப்பாக, சுயேச்சை வேட்பாளர்கள் பலர் திமுகவில் இணைவதில் பெரிதும் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
நேற்று முன்தினம் தேர்தல் முடிவுகள் வெளியான சில நிமிடங்களிலேயே மதுரையைச் சேர்ந்த அருண்சுந்தர பிரபு என்பவர் திமுகவில் தன்னை இணைத்துக் கொண்டார்.
இதனால் அதிமுக தலைமை கடும் அதிர்ச்சி அடைந்த நிலையில், சிவகங்கை நகராட்சியில் வெற்றிபெற்ற மூன்று சுயேச்சைகள், ஒரு அதிமுக வேட்பாளர் உள்ளிட்ட நால்வர் வெற்றிக்குப் பின்னர் திமுகவில் இணைந்துள்ளனர்.
சிவகங்கை நகராட்சிக்குட்பட்ட 4வது வார்டில் வெற்றிபெற்ற சுயேச்சை வேட்பாளர் சேது நாச்சியார், நேற்று அமைச்சர் பெரியகருப்பன் முன்னிலையில் திமுகவில் இணைந்தார்.
இதேபோல், 19வது வார்டில் வெற்றபெற்ற பாக்கியலட்சுமி, 23வது வார்டில் வெற்றிபெற்ற ராஜபாண்டி ஆகிய இரு சுயேச்சை வேட்பாளர்களும் திமுகவினருடன் நடத்திய பேச்சுவார்த்தை்ககுப் பிறகு அக்கட்சியில் இணைந்தனர்.
22வது வார்டில் வெற்றிபெற்ற அதிமுக வேட்பாளர் சரவணனும் திமுகவில் இணைவதாக அறிவித்தது அதிமுக தலைமைக்கு அதிர்ச்சி அளித்துள்ளது.
சுயேச்சையாக நின்று தேர்தலில் வெற்றி பெற்றாலும், தனித்து நின்று வார்டு மக்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண முயற்சி செய்வதைவிட ஆளுங்கட்சியில் இணைந்து செயல்படுவது நல்லது என்பதே பலரது கருத்தாக உள்ளது.
மேலும் கட்சி ஆதரவின்றி வெற்றி பெற்றவர்கள் ஏதேனும் அரசியல் கட்சியில் இணையும்போது அவர்களுக்கு கூடுதல் மரியாதை கிடைப்பது வழக்கம்.
தவிர உள்ளாட்சிப் பிரதிநிதி என்பதுடன் கட்சிப் பதவி கிடைக்கவும் வாய்ப்புள்ளது.
இது தங்களின் அரசியல் எதிர்காலத்துக்கு நல்லது என வெற்றிபெற்ற சுயேச்சைகளில் சிலர் நினைக்கின்றனர் என்று அரசியல் பார்வையாளர்கள் கருதுகின்றனர்.

