சென்னை: நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் அதிமுக படுதோல்வி கண்டுள்ள நிலையில், இதற்கான காரணங்களை ஆராய்ந்து உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என அக்கட்சியினர் தலைமையிடம் வலியுறுத்தத் தொடங்கி உள்ளனர்.
சசிகலா விவகாரம், ஒற்றைத் தலைமை கோரிக்கை, உட்கட்சிப் பூசல்கள் ஆகியவைதான் கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக தோல்வி அடைய காரணம் என்று முன்பு கூறப்பட்டது.
எனினும், இது தொடர்பாக கட்சித் தலைமை எந்தவித நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை என்றும் அதன் எதிரொலியாகவே நடப்பு தேர்தலில் படுதோல்வியைச் சந்திக்க நேர்ந்துள்ளது என்றும் பல நிர்வாகிகள் கருதுவதாகக் கூறப்படுகிறது.
கடந்த 2019ஆம் ஆண்டு அதிமுக ஆட்சிக் காலத்திலேயே நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலை நடத்த வேண்டும் என கட்சி நிர்வாகிகள் பலர் அன்றைய முதல்வர் எடப்பாடி பழனிசாமியிடமும் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்திடமும் வலியுறுத்தியதாகவும் அதை கட்சித் தலைமை கண்டுகொள்ளவில்லை என்றும் தமிழக ஊடகம் தெரிவித்துள்ளது.
அப்போதே தேர்தல் நடந்திருந்தால் இவ்வளவு மோசமான தோல்வி ஏற்பட்டிருக்காது என்று அந்நிர்வாகிகள் கூறியதாக ஊடகச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
பாஜகவுடன் கூட்டணி அமைத்ததும் தோல்விக்கான ஒரு காரணம் என முக்கிய நிர்வாகிகள் சிலர் கூறுவதாகத் தெரிகிறது.
மொத்தத்தில் தேர்தல் கூட்டணி, அரசியல் உறவு, ஒற்றைத் தலைமை, சசிகலா விவகாரம் உள்ளிட்ட பிரச்சினைக்குரிய விவகாரங்கள் தொடர்பில் கட்சித் தலைமை உரிய நடவடிக்கைகளை எடுக்காததுதான் இன்று அதிமுகவின் பரிதாப நிலைக்குக் காரணம் என்று மூத்த நிர்வாகிகள் கருதுவதாக தமிழக ஊடகம் கூறியுள்ளது.

