சென்னை: தமிழின் ஆட்சியாக, தமிழ் இனத்தின் ஆட்சியாக திமுக ஆட்சி இருப்பதைப் பார்த்து பலருக்கும் வயிற்றெரிச்சலாக இருக்கிறது என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
கல்வி மறுக்கப்பட்ட இனத்துக்கு கல்வி கொடுத்ததும் பொருளாதார உரிமை பறிக்கப்பட்ட இனம் அனைத்துத் துறைகளிலும் மேன்மை அடைவதும் சமூகரீதியாக ஒடுக்கப்பட்ட மனிதர்கள் உயர்ந்து நிற்பதும்தான் தமிழ்ச் சமுதாயத்துக்கு கடந்த நூறு ஆண்டுகளில் திராவிட இயக்கம் வழங்கியிருக்கக்கூடிய மாபெரும் கொடை என்று அவர் குறிப்பிட்டார்.
"'திராவிட மரபினத்தைச் சேர்ந்தவன்' என்று நான் சொல்வதைப் பார்த்தவர்களுக்கு எல்லாம் கோபம் வருகிறது. ஏனென்றால், வெற்றி பெற்றவன் சொல்கிறானே என்பதால்தான்.
"ஒரு காலத்தில் தோற்று ஓடியவர்களைத் திராவிடர்கள் என்றோமே, இன்று வெற்றி பெற்று நிற்கிறார்களே என்பதுதான் அவர்களது கோபத்துக்கு முக்கியமான காரணம்.
"திராவிட இயக்கத்தின் சமூகநீதிக் கொள்கையை, மாநில சுயாட்சி உரிமையை இன்று அகில இந்தியாவும் எதிரொலிக்க தொடங்கியிருக்கும் காலத்தில், தமிழ்நாட்டில் சிலர் திராவிட இயக்கத்தை வீழ்த்துவோம் என்று பிதற்றுவதைப் புறந்தள்ளத்தான் வேண்டும்," என்றார் முதல்வர் மு.க.ஸ்டாலின்.

