மேயர் பதவிக்கான மறைமுகத் தேர்தலில் சிக்கலின்றி வெற்றிபெறத் திட்டம்
சென்னை: நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் வெற்றி பெற்றுள்ள அதிமுக உள்ளாட்சிப் பிரதிநிதிகளை தங்கள் பக்கம் இழுக்க திமுக தலைமை முயற்சி செய்வதாக தமிழக ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.
இதனால் அதிமுக வட்டாரங்களில் பரபரப்பு நிலவி வருகிறது.
இதற்கிடையே வெற்றிபெற்ற அதிமுக உள்ளாட்சிப் பிரதிநிதிகளை அக்கட்சித் தலைமை இன்னும் நேரில் அழைத்து வாழ்த்து தெரிவிக்கவில்லை என்பதும் அக்கட்சியினர் மத்தியில் விவாதப் பொருளாகி உள்ளது.
அதிமுகவில் இருந்து குறைந்தபட்சம் 150 உள்ளாட்சிப் பிரதிநிதிகளை தங்கள் வசம் இழுக்க வேண்டும் என திமுக தரப்பில் திட்டமிடப்பட்டுள்ளதாகவும் அதற்கான மறைமுக நடவடிக்கைகளை அக்கட்சியினர் மேற்கொண்டுள்ளதாகவும் இந்து தமிழ் ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.
நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்ட சில நிமிடங்களிலேயே அதிமுக வார்டு உறுப்பினர்கள் இருவர் திமுக பக்கம் சாய்ந்தனர். இதுவரை ஐந்து உள்ளாட்சிப் பிரதிநிதிகள் திமுகவுக்கு சென்றுவிட்டனர்.
இதையடுத்து மேலும் 150க்கும் மேற்பட்ட அதிமுக உள்ளாட்சி உறுப்பினர்களை இழுக்க திமுக பல்வேறு கட்டங்களில் முயற்சி செய்கிறது என்று வெற்றி பெற்றவர்கள் கூறுவதாக அந்த ஊடகச் செய்தியில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.
"குறிப்பாக, தேனி, தென்காசி, சேலம், கோவை, சிவகங்கை, திருவண்ணாமலை, செங்கல்பட்டு, திருநெல்வேலி உள்ளிட்ட மாவட்டங்களில் அதிமுக கணிசமாக வெற்றி பெற்றுள்ளது.
"இம்மாவட்டங்களைச் சேர்ந்த நகராட்சி, பேரூராட்சிகளின் வார்டுகளில் அதிமுக அதிக எண்ணிக்கையில் வெற்றி பெற்றுள்ளது. எனவே இம்மாவட்டங்களைச் சேர்ந்த அதிமுக உள்ளாட்சிப் பிரதிநிதிகளைத்தான் திமுக குறிவைத்துள்ளது.
"இந்தச் சமயத்தில் கட்சித் தலைமை வெற்றி பெற்றுள்ள எங்களை நேரில் சந்தித்து நம்பிக்கையூட்ட வேண்டும்," என அதிமுகவினர் கூறுவதாக இந்து தமிழ் ஊடகம் மேலும் தெரிவித்துள்ளது.
நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் தமிழகத்தில் உள்ள 21 மாநகராட்சிகளையும் திமுக கைப்பற்றி உள்ளது. வெற்றிபெற்ற ஆயிரக்கணக்கான திமுக உள்ளாட்சிப் பிரதிநிதிகளை நேரில் வரவழைத்து முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்தார்.
அதேபோல் பாஜக தலைமையும் வெற்றிபெற்ற வார்டு உறுப்பினர்களை நேரில் வரவழைத்து வாழ்த்து தெரிவித்துள்ளது. காங்கிரஸ் உள்ளிட்ட மற்ற கட்சித் தலைமையும் இவ்வாறு செய்யத் தவறவில்லை.
இந்நிலையில், அதிமுக தலைமை மட்டும் அக்கட்சி சார்பில் வெற்றிபெற்றுள்ள இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட உள்ளாட்சிப் பிரதிநிதிகளை இன்னும் சந்திக்கவில்லை. இதனால் அவர்கள் மனதளவில் சோர்ந்து, விரக்தி அடைந்துள்ளதாகக் கூறப்படுகிறது.
இத்தகைய சூழலில் எதிர்வரும் மேயர், துணை மேயர் உள்ளிட்ட பதவிகளுக்கான மறைமுக தேர்தலில் எந்தவிதச் சிக்கலும் இன்றி வெற்றிபெற வேண்டும் என திமுக தலைமை விரும்புவதாகவும் அதன் பொருட்டே அதிமுகவில் இருந்து 150 உள்ளாட்சிப் பிரதிநிதிகளையாவது தங்கள் பக்கம் இழுக்க வேண்டும் என திமுக தலைமை முயற்சி செய்வதாகவும் ஊடகச் செய்தி தெரிவிக்கிறது.
இதற்கிடையே காங்கிரஸ் எம்பி ராகுல்காந்தி இன்று சென்னைக்கு வர இருப்பதாகவும் அவர் புதிதாக தேர்வு செய்யப்பட்டுள்ள அக்கட்சி உள்ளாட்சிப் பிரதிநிதிகளை சந்திக்க இருப்பதாகவும் மாலைமலர் ஊடகம் தெரிவித்துள்ளது.
இந்தச் சந்திப்புக்குப் பின்னர் மேயர், துணை மேயர் உள்ளிட்ட உள்ளாட்சிப் பதவிகள் சிலவற்றை காங்கிரசுக்கு ஒதுக்க வேண்டும் என திமுக தலைமையிடம் தமிழக காங்கிரஸ் கோரிக்கை விடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கு ஒரு மேயர், ஒன்பது துணை மேயர் பதவிகளை ஒதுக்க வேண்டும் என அக்கட்சித் தலைவர் திருமாவாளவன் கோரிக்கை விடுத்துள்ளார்.

