சென்னை: அரசியலில் வெற்றி, தோல்வி சகஜம். அதை ஒரு பொருட்டாக எடுத்துக் கொள்ளக் கூடாது என்று பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தனது கட்சித் தொண்டர்களுக்கு அறிவுரை கூறியுள்ளார்.
அண்மையில் நடந்த உள்ளாட்சித் தேர்தலில் பாமக அவ்வளவாக சோபிக்கவில்லை.
இந்த நிலையில் தைலாபுரத்தில் உள்ள தனது தோட்டத்தில் காஞ்சி புரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்ட செயலாளர்களுடன் டாக்டர் ராமதாஸ் ஆலோசனை நடத்தினார்.
அப்போது நகர்ப்புற, உள்ளாட்சி தேர்தலில் எதிர்பார்த்த அளவுக்கு பாமக வேட்பாளர்கள் வெற்றி பெறாததற்கான காரணங்களை அவர் கேட்டறிந்தார்.
அப்போது வாக்குக்குப் பணம் அதிக அளவில் வழங்கப்பட்டதாக சிலர் கூறினர்.
இதையடுத்து நிர்வாகிகளிடம் பேசிய திரு ராமராஸ், தேர்தலில் வெற்றி, தோல்வி என்பது வழக்கமானது. பெரிய பெரிய கட்சிகள்கூட தேர்தலில் தோல்வியைச் சந்தித்துள்ளன என்று தெரிவித்தார்.
"நமது வேலையை நாம் தொடர்ந்து தொய்வில்லாமல் செய்ய வேண்டும். கிராமம் கிராமமாக செல்லுங்கள், திண்ணைப் பிரசாரங்கள் மூலம் மக்களிடம் பேசுங்கள்.
"இன்னும் இரண்டு ஆண்டுகளில் வரப்போகும் நாடாளுமன்றத் தேர்தலுக்கு இப்போதே தயாராகுங்கள்.
"தமிழகத்தின் தென் கோடியில் உள்ள கன்னியாகுமரி மாவட்டத்திலும் நமது வேட்பாளர் வெற்றி பெற்றுள்ளார். மேற்கு மாவட்டமான ஈரோட்டிலும் வெற்றி பெற்று இருக்கிறார்கள். எந்த ஊரிலும் பாமக கிளை இல்லை என்ற நிலை இருக்கக்கூடாது. அனைத்து வாக்குச் சாவடிகளிலும் பா.ம.க. ஏஜெண்ட் இருக்க வேண்டும். நமது உழைப்பின் மூலம் மக்கள் செல்வாக்கை பெற முடியும்," என்று தொண்டர் களிடம் அவர் வலியுறுத்தியுள்ளார்.

