சென்னை: மக்கள் எதிர்ப்பு தெரிவிக்கும் பகுதிகளில் மதுக்கடைகள் திறக்கப்படுவதை தடுக்கும் வகையில் தமிழக அரசு சட்டத்தில் திருத்தம் செய்துள்ளது. இதற்கு மது எதிர்ப்பு இயக்கத்தினரும் சமூக ஆர்வலர்களும் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.
புதிய சட்டத்திருத்தத்தின்படி, மதுக்கடைகள் திறக்கப்படுவதை தடுக்கும் அதிகாரம் மக்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.
மாநிலத்தின் எந்தவொரு பகுதியிலும் மதுக்கடை திறக்கும் முன், பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவிக்கும் பட்சத்தில், அது குறித்து சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சியர் பரிசீலிக்க வேண்டும் என சட்டத்திருத்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஒருவேளை, மக்களின் எதிர்ப்பை மீறி மதுக்கடை திறக்கப்பட்டால் ஆட்சியரின் முடிவை எதிர்த்து, அடுத்த முப்பது நாள்களுக்குள் மதுவிலக்கு ஆயத்தீர்வை ஆணையரிடம் மேல் முறையீடு செய்யலாம் என்கிறது புதிய சட்டத்திருத்தம்.
பொதுவாக, பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவிக்கும் இடத்தில் டாஸ்மாக் மதுக்கடைகளைத் திறக்க வேண்டாம் என தமிழக அரசு அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் உத்தரவு பிறப்பித்துள்ளதாக ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த காலங்களில் மக்கள் அதிகம் கூடும் இடங்களில் மதுக்கூடங்கள் திறக்கப்பட்டதாக மக்கள் மத்தியில் எதிர்ப்பு நிலவியது. இந்நிலையில், தமிழக அரசு சட்ட விதிகளை மாற்றி அமைத்துள்ளது.

