சென்னை: போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் வகையில் சென்னை விமான நிலையத்துக்கும் கிளாம்பாக்கம் பகுதிக்கும் இடையே மெட்ரோ ரயில் பாதை அமைக்கும் பணி எதிர்வரும் 2026ஆம் ஆண்டுக்குள் நிறைவடையும் என அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இத்திட்டம் மொத்தம் ரூ.4,080 கோடி செலவில் செயல்படுத்தப்படுகிறது.
தற்போது சென்னையில் இயக்கப்படும் மெட்ரோ ரயில்கள் மூலம் தினமும் சுமார் 115,000 பேர் பயணம் செய்கின்றனர். அடுத்த சில ஆண்டுகளில் இந்த எண்ணிக்கை பெருமளவு அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையடுத்து விமான நிலையத்தில் இருந்து கிளாம்பாக்கம் புறநகர் பேருந்து நிலையம் வரை புதிய மெட்ரோ ரயில் பாதையை அமைக்க மத்திய, மாநில அரசுகள் முடிவு செய்துள்ளன.
இதற்கான விரிவான திட்ட அறிக்கை தமிழக அரசிடம் அளிக்கப்பட்டுள்ள நிலையில், 15.3 கிலோ மீட்டர் தூரத்துக்கு மெட்ரோ ரயில் பாதை அமைக்கப்பட உள்ளது.
"விமான நிலையம், கிளாம்பாக்கம் இடையே 12 ரயில் நிலையங்கள் அமைக்கப்பட உள்ளன.
"பல்லாவரம், கோதண்டம் நகர், குரோம்பேட்டை, மகாலட்சுமி காலனி, திரு.வி.க.நகர், தாம்பரம், இரும்புலியூர், பீர்க்கங்கரணை, பெருங்களத்தூர், வண்டலூர், அண்ணா உயிரியல் பூங்கா, கிளாம்பாக்கம் பஸ் நிலையம் ஆகிய இடங்களில் மெட்ரோ ரயில் நிலையங்கள் அமைக்கப்படுகின்றன.
"இத்திட்டம் செயல்படுத்தப்பட்ட பின்னர் தமிழகத்தின் தென் மாவட்ட மக்கள் சென்னைக்கு வருவதும் சென்னையில் உள்ளவர்கள் சொந்த ஊர்களுக்குச் செல்வதும் எளிதாகும்.
"போக்குவரத்து நெரிசல் இருக்காது என்பதால் நேரத்தை மிச்சப்படுத்த முடியும்," என மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதையடுத்து புதிய மெட்ரோ ரயில் பாதை அமைக்கும் பணிகள் விரைவில் தொடங்க உள்ளன. இது 15.3 கிலோ மீட்டர் தூரத்துக்கு உயர்த்தப்பட்ட பாதையாக இருக்கும் என்றும் அவர்கள் கூறிஉள்ளனர்.