சென்னை: மாவட்ட ஆட்சியர்கள், காவல்துறை, வனத்துறை அதிகாரிகள் பங்கேற்கும் மூன்று நாள் மாநாடு சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நேற்று தொடங்கியது.
இம்மாநாட்டில் பேசிய முதல்வர், "சட்டம் ஒழுங்கு விவகாரத்தில் ஒருபோதும் சமரசம் செய்துகொள்ள மாட்டேன்.
"கட்டப்பஞ்சாயத்து, நில அபகரிப்பில் ஈடுபடுபவர்கள் யாராக இருந்தாலும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
"மாநிலத்தில் சட்டம் ஒழுங்கிற்கு குந்தகம் விளைவிக்கும் சக்திகளை இரும்புக் கரம் கொண்டு அடக்க வேண்டும். சட்டம், ஒழுங்கு சீராக இருப்பதை கண்காணிக்க வேண்டும். பெண்களுக்கு எதிரான குற்றங்களையும் அனுமதிக்கக் கூடாது," என அறிவுறுத்தினார்.
தொடர்ந்து பேசிய அவர், மாவட்ட ஆட்சியர்கள் அனைவரும் மாணவர்கள், இளைஞர்களுக்கு வழிகாட்டியாகத் திகழவேண்டும் எனத் தெரிவித்தவர், அனைவரும் நேர்மையாக ஒளிவுமறைவின்றி வெளிப்படைத் தன்மையோடு, முழு அர்ப்பணிப்போடு செயல்பட வேண்டும் எனவும் சொன்னார்.
மத நல்லிணக்கத்திற்கு எதிராக யார் செயல்பட்டாலும் உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டும்.
சாலை விபத்துகள் அதிகம் நடைபெறும் மாநிலங்களில் ஒன்றாக தமிழ்நாடு இருப்பது வருத்தம் அளிக்கிறது. அதனால், சாலை விபத்துகளைக் குறைக்க தேவையான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றார்.

