திருவள்ளூர்: பேருந்தில் கூட்ட நெரிசல் அதிகமாக இருந்ததை அடுத்து திருவள்ளூர் சட்டப்பேரவை உறுப்பினர் வி.ஜி.ராஜேந்திரன், பேருந்துப் படியில் தொங்கியபடி பயணம் மேற்கொண்டார்.
நேற்று முன்தினம் திருவள்ளூரில் உள்ள பூண்டி பகுதியில் நடைபெற்ற அரசு விழாவில் பங்கேற்ற அவர், பின்னர் அருகில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஆய்வு மேற்கொண்டார்.
அப்போது அங்கிருந்த பேருந்து நிறுத்தத்தில் நிறைய மாணவர்கள் பேருந்துக்காகக் காத்திருந்தனர். சட்டப்பேரவை உறுப்பினரைக் கண்டதும், அம்மாணவர்கள் பள்ளி நேரத்தில் கூடுதல் பேருந்துகளை இயக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.
போதுமான பேருந்துகள் இல்லாத காரணத்தால், பல மாணவர்கள் படியில் தொங்கியபடி உயிருக்கு ஆபத்தான நிலையில் பயணம் செய்வதாக அவர்கள் தெரிவித்தனர்.
அப்போது அவ்வழியே செல்லும் பேருந்து ஒன்று வர, மாணவர்களுடன் சேர்ந்து எம்எல்ஏ ராஜேந்திரனும் அதில் ஏற முற்பட்டார்.
எனினும் கூட்டம் அதிகமாக இருந்ததால், அவர் மாணவர்களுடன் பேருந்துப் படியில் தொங்கியபடியே பயணம் செய்தார்.
இதையடுத்து திமுக நிர்வாகிகளும் அவருடன் பேருந்தில் சென்றனர். அதன் பின்னர் மாணவர்களின் கோரிக்கை குறித்து பரிசீலித்து மிக விரைவில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் உறுதியளித்தார்.

