திருப்பூர்: சாலை வசதி இல்லாத காரணத்தால் உயிருக்குப் போராடும் நோயாளிகளை ஐந்து கிலோ மீட்டர் தூரம் தொட்டில் கட்டி தூக்கிச் செல்லும் அவலநிலை ஈசல்திட்டு என்ற மலைக்கிராமத்தில் நிலவி வருகிறது.
திருப்பூர் மாவட்டத்தில் உள்ள கொங்குரார்குட்டை மலையடிவாரத்தில் இருந்து சுமார் ஐந்து கிலோ மீட்டர் தூரத்தில் செங்குத்தான மலையில் அமைந்துள்ளது ஈசல்திட்டு மலைக்கிராமம்.
அக்கிராமத்துக்குச் செல்ல சாலை வசதி இல்லை. கரடு முரடாக உள்ள பாதையைத்தான் அங்கு வசிக்கும் 250 பேர் பல ஆண்டுகளாகப் பயன்படுத்தி வருகின்றனர்.
யாருக்காவது உடல்நலம் பாதித்தால் மலைப்பாதையில் ஐந்து கிலோ மீட்டர் தூரத்துக்கு நடந்து செல்ல வேண்டும். நடக்க முடியாத நிலையில் இருப்பவர்களைத் தொட்டில் கட்டி, அதில் படுக்க வைத்து கீழே தூக்கிச் செல்கிறார்கள்.
இந்நிலையில், ஈசல்திட்டு கிராமத்தில் வசிக்கும் 54 வயதான மாயம்மாளுக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டது. இதையடுத்து, அவரையும் தொட்டில் கட்டி படுக்கவைத்து, ஐந்து கிலோ மீட்டர் தூரம் சுமந்து வந்து ஜல்லிபட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.
சமூக ஊடகங்களின் பயன்பாடு அதிகரித்துள்ள நிலையில், மாயம்மாள் இவ்வாறு தொட்டிலில் தூக்கிவரப்பட்ட சம்பவம் குறித்து பொதுமக்களில் ஒருவர் சமூக ஊடகத்தில் பதிவிட்டதை அடுத்து, ஊடகங்களின் பார்வை ஈசல்திட்டு கிராமம் பக்கம் திரும்பியுள்ளது.