ஒட்டன்சத்திரம்: ஒட்டன்சத்திரத்தில் தனது தாய்மாமன் உருவச் சிலையின் மடியில் அமர்ந்து இரு குழந்தைகள் மொட்டை அடித்து, காது குத்திக்கொண்டனர்.
கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு விபத்து ஒன்றில் உயிரிழந்த தனது சகோதரனின் ஆசையை நிறைவேற்ற இந்தக் காதணி விழாவுக்கு பிரியதர்ஷினி என்பவர் ஏற்பாடு செய்திருந்தார்.
திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் பகுதியைச் சேர்ந்தவர் பாண்டித்துரை. இவர் மீது அதிக பாசம் கொண்டிருந்த அவரது சகோதரி பிரியதர்ஷினி, தனது இரண்டு பிள்ளைகளுக்கும் தாய்மாமன் பாண்டித்துரை மடியில் வைத்து காது குத்த ஆசைப்பட்டார்.
இதையடுத்து, பாண்டித்துரை யைப் போலவே தத்ரூபமாக சிரித்த முகத்துடன் உருவாக்கப்பட்டிருந்த மெழுகுச் சிலையை வைத்து, தாய்மாமன் உறவுக்கான செய்முறைகளைச் செய்து, அவரது மடியில் வைத்து தனது மகள் தாரிகாஸ்ரீ, மகன் மோனேஷ் குமரன் ஆகியோருக்கு ெமாட்டை அடித்து, காதணி விழா நடத்தினார்.
இதுதொடர்பாக பாண்டித்துரையின் தாய் பசுங்கிளி கூறியபோது, "அக்காவின் குழந்தைகளை தனது மடியில் அமரவைத்து காதணி விழா நடத்தவேண்டும் என்பது பாண்டித்துரையின் நீண்ட நாள் கனவு. எனவே, ரூ.5 லட்சம் செலவில் அவனது சிலையைச் செய்து குழந்தைகளுக்கு காதணி விழா நடத்தி எனது மகனின் ஆசையை குடும்பத்தினர் அனைவரும் ஒன்று சேர்ந்து நிறைவேற்றி உள்ளோம்," என நெகிழ்ச்சியுடன் கூறினார்.

