திருச்சி: மேகதாதுவில் புதிய அணை கட்ட கர்நாடகாவுக்கு மத்திய அரசு அனுமதி அளிக்கக்கூடாது என அமமுக வலியுறுத்தி உள்ளது.
கர்நாடக அரசைக் கண்டித்து அக்கட்சி சார்பில் நேற்று திருச்சியில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் பங்கேற்றார். மேலும், விவசாய சங்கங்களும் அமமுகவுடன் இணைந்து போராட்டத்தை நடத்தின.
அப்போது பேசிய தினகரன், மேகதாதுவில் அணை கட்ட அனுமதிக்கப்பட்டால், தமிழகம் சோமாலியா நாட்டைப் போல் வறட்சியாகிவிடும் என்றார். தமிழகத்தில் நிலத்தடி நீர் வற்றி வருவதாகவும் நீர்மட்டத்தை உயர்த்த நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தினார். தமிழக மக்களை மத்திய அரசு வஞ்சிக்கக்கூடாது என்றார் அவர்.
இந்நிலையில், போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தியதாக தினகரன், விவசாய சங்கத் தலைவர் அய்யாக்கண்ணு உள்ளிட்ட 1,200 பேர் மீது திருச்சி காவல்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது.
உள்ளாட்சித் தேர்தலின்போது அமமுகவுக்காக தினகரன் பெரிய அளவில் பிரசாரம் மேற்கொள்ளவில்லை. மேலும், சில விவகாரங்கள் தொடர்பாக அறிக்கைகளை மட்டும் வெளியிட்டு வந்தார். அவர் தீவிர அரசியலில் ஈடுபட்டுள்ளாரா என்ற சந்தேகம் எழுந்துள்ள நிலையில், திடீரென இந்தப் போராட்டத்தில் பங்கேற்றுள்ளார்.

