திருவண்ணாமலை: தமிழகத்தில் கொரோனா நான்காவது அலை ஏற்பட வாய்ப்புள்ளதாக நிபுணர்கள் கூறியுள்ளதால் அனைவரும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
திருவண்ணாமலையில் செய்தியாளர்களிடம் பேசிய, தமிழகத்தில் தொற்றுப் பரவல் வெகுவாகக் கட்டுக்குள் வந்துள்ள போதிலும், அடுத்த ஓரிரு மாதங்களுக்கு பொதுமக்கள் முன்னெச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும் என வலியுறுத்தினார்.
"எதிர்வரும் ஜூன் மாதம் கொரோனா நான்காவது அலை வர வாய்ப்புள்ளது என கான்பூர் ஐஐடி மையம் தெரிவித்துள்ளது. சீனா, சிங்கப்பூர், மலேசியா, நமது அண்டை மாநிலமான கேரளாவில் கொரோனா பாதிப்பு அதிகமாக உள்ளது என்பது தெரியவந்துள்ளது.
"எனவே ஓரிரு மாதங்களுக்கு பொதுமக்கள் முகக்கவசம் அணிவது, சமூக இடைவெளியைக் கடைப்பிடிப்பது ஆகியவற்றை பொறுப்புடன் பின்பற்ற வேண்டும்," என அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறினார்.
சிங்கப்பூர், மலேசியா, கேரளாவுக்கு பலர் பயணம் மேற்கொண்டு நாடு திரும்புவதால் தொற்றுப் பரவலுக்கு வாய்ப்புள்ளது என்பதை மறைமுகமாகக் குறிப்பிட்டே அமைச்சர் இவ்வாறு அறிவுறுத்தியதாகத் தெரிகிறது.
இதற்கிடையே, தமிழகத்தில் நேற்று முன்தினம் புதிதாக 86 பேருக்கு கொரோனா கிருமி தொற்றி உள்ளது. மருத்துவமனையில் சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 1,054 ஆகக் குறைந்துள்ளது. 14 மாவட்டங்களில் புதிதாக யாருக்கும் கிருமி தொற்றவில்லை.
ஒருவர் மட்டும் உயிரிழந்துவிட்டார் என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

