சென்னை: தமிழகத்தில் பொது மக்களுக்குப் பயனளிக்கும் வகையில் மிகப்பெரிய புத்தகப் பூங்கா அமைக்கப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
அனைத்து நூல்களும் ஒரே இடத்தில் கிடைப்பதை உறுதி செய்யும் வகையில் அந்தப் பூங்கா அமையும் என்றும் அவர் கூறியுள்ளார்.
தமிழ் மொழி, இலக்கிய வளர்ச்சி, சமுதாய உயர்வுக்கு தொண்டாற்றிய தமிழறிஞர்களுக்கு தமிழக அரசின் விருதுகள் வழங்கும் விழா சென்னையில் நேற்று முன்தினம் நடைபெற்றது. இதில் பங்கேற்று விருதுகளை வழங்கியபோதே முதல்வர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
மேலும், தமிழ் அறிஞர்களுக்கு வழங்கப்படும் விருதுகளுக்கான பரிசுத்தொகை உயர்த்தப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
"தமிழ் இனம் சுமார் 3,500 ஆண்டுகள் பழமை வாய்ந்தது. தமிழின் பெருமையை எடுத்துச் சொல்லும் அனைத்து நூல்களும் ஒரே இடத்தில் கிடைக்கும் நோக்கத்தை நிறைவேற்றுவதற்காக மாபெரும் புத்தகப் பூங்காவை அமைக்க அரசு திட்டமிட்டுள்ளது.
"இந்த புத்தகப் பூங்கா உருவானால், அனைத்துப் பதிப்பாளர்கள், விற்பனையாளர்களை ஒரே இடத்தில் சந்திக்கும் சூழல் உருவாகும்," என்றார் முதல்வர் மு.க. ஸ்டாலின்.
தமிழக அரசுப் பணிகளுக்கு தமிழ் மொழி கட்டாயமாக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்ட அவர், ஆலயங்களில் தமிழில் அர்ச்சனை செய்யவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றார்.

