கோவை: அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணியின் வீடு, அவருடன் தொடர்புள்ள இடங்களில் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கைகளின்போது கணக்கில் வராத 84 லட்சம் ரொக்கப் பணம், 11.15 கிலோ தங்கம், 118 கிலோ வெள்ளி ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக லஞ்ச ஒழிப்புத்துறை தெரிவித்துள்ளது.
மின்னிலக்கப் பணம் (கிரிப்டோ கரன்சி) தொடர்பாக அவர் ரூ.34 லட்சம் முதலீடு செய்துள்ளதாகவும் அது தொடர்பான ஆவணங்கள் கிடைத்துள்ளது என்றும் அதிகாரிகள் கூறினர்.
கைபேசிகள், மடிக்கணினிகள், கணினி வன்பொருள்கள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டதாக லஞ்ச ஒழிப்புத்துறை தெரிவித்துள்ள நிலையில், தம் வீட்டில் இருந்து எந்தப் பொருளையும் லஞ்ச ஒழிப்புதுறையினர் கைப்பற்றவில்லை என வேலுமணி கூறியுள்ளார். சோதனை நடவடிக்கைக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், அதிகாரிகள் ஒரு ரூபாயைக் கூட பறிமுதல் செய்யவில்லை என்றும் நகைகளும் ரொக்கப் பணமும் கைப்பற்றப்பட்டதாக தவறான தகவல்களை வெளியிட்டுள்ளனர் என்றும் சாடினார்.
"முதல்வர் ஸ்டாலின், திமுக அரசின் தூண்டுதலின் பேரில் என் வீடு உட்பட பல்வேறு இடங்களில் சோதனை நடத்தி உள்ளனர். இந்தச் சோதனை அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக நடைபெற்றுள்ளது.
"வேண்டுமென்றே திட்டமிட்டு பழிவாங்கும் நோக்கத்துடன் இதுபோன்று செயல்படுகிறார்கள். கோவை மாவட்டத்தில் அதிமுக பத்து சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் வெற்றி பெற்றது. இதன் காரணமாக திமுக அரசு வேண்டுமென்றே லஞ்ச ஒழிப்பு அதிகாரிகளை ஏவி விட்டுள்ளது," என்றார் எஸ்.பி.வேலுமணி.

