வேலூர்: ஐந்து ஆசிரியர்கள் வேலை இடமாற்றம் செய்யப்பட்டதால் அவர்களைப் பிரிய முடியாத மாணவிகள் கதறி அழுத காட்சி மனதை உருக்குவதாக இருந்தது.
வேலூர் மாவட்டம் கே.வி.குப்பத்தில் அரசு பெண்கள் மேல் நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு ஒன்பது, 10ஆம் வகுப்பு மாணவிகளுக்கு புனிதா, கார்த்திகேயன், ஜெயந்தி, தனலஷ்மி, சுகந்தி ஆகிய ஐந்து ஆசிரி யர்கள் பாடம் நடத்தி வந்தனர்.
இவர்களில் புனிதாவும் கார்த்திகேயனும் 14 ஆண்டுகளுக்கு மேலாகவும் மற்றவர்கள் பத்து ஆண்டுகளுக்கு மேலாகவும் அங்கு பணிபுரிந்து வருகின்றனர்.
இவர்கள் சிறப்பாக பாடங்களை நடத்தியதால் மாணவிகள் ஆர்வத்துடன் பள்ளிக்கு வந்து கற்றுக் கொண்டனர்.
இந்த நிலையில் மாணவி களுக்கு அதிர்ச்சி ஏற்படுத்தும் வகையில் ஐந்து ஆசிரியர்களும் இடமாற்றம் செய்யப்படுவதாக பள்ளிக்கல்வித் துறை கடந்த செவ்வாய்க்கிழமை உத்தரவு அனுப்பியது.
ஆசிரியர் கார்த்திகேயன் பெண்ணாத்தூர் பெண்கள் மேல் நிலைப் பள்ளிக்கும் ஆசிரியை தனலட்சுமி வேலப்பாடி மேல்நிலைப் பள்ளிக்கும் ஆசிரியை புனிதா காங்கேயநல்லூர் ஆண்கள் மேல்நிலைப் பள்ளிக்கும் ஜெயந்தி என்ற ஆசிரியர் லத்தேரி பெண்கள் மேல் நிலைப் பள்ளிக்கும் சுகந்தி என்ற ஆசிரியர் ஆற்காடு தோப்புக்காடு உயர்நிலைப் பள்ளிக்கும் மாற்றப்பட்டனர்.
இதையடுத்து மறுநாள் புதன்கிழமை நண்பகலில் பணிமாறுதல் பெற்ற ஐந்து ஆசிரியர்களும் கடைசியாகப் பாடம் நடத்திமுடித்தனர். பின்னர் பள்ளித் தலைமை ஆசிரியர் அறையில் இருந்து வெளியே வந்த அவர்களை மாணவிகள் சுற்றி வளைத்து, கட்டிப்பிடித்து அழுதனர்.
"வேறு பள்ளிக்கு செல்ல வேண்டாம், இந்த பள்ளியிலே இருங்கள்," என்று மாணவிகள் சொல்லி, சொல்லிக் கதறி அழுதனர். அவர்களை சமாதானப்படுத்திய ஆசிரியர்கள் நன்றாக படிக்க வேண்டும் என்று அறிவுறுத்தினர்.
ஆசிரியர்கள் அங்கிருந்து விடை பெறும் வரை மாணவிகள் தொடர்ந்து அழுது கொண்டிருந்தனர்.
கடந்த 2019ஆம் ஆண்டிலும் திருவள்ளூர் மாவட்டம் வெளியகரம் அரசு உயர்நிலைப்பள்ளியில் ஆங்கில ஆசிரியராக பணியாற்றிய ஆசிரியர் பகவான் பணிமாறுதல் செய்யப்பட்டார். இதனால் அதிர்ச்சி யடைந்த மாணவர்கள் ஆசிரியரை அங்கிருந்து வெளியேறவிடாமல் தடுத்து நிறுத்திய காட்சி சமூக ஊடகங்களில் பரவி பெரும் பர பரப்பை ஏற்படுத்தியது.

