சேலம்: சேலம் மாவட்டத்தில் வளர்ப்பு நாய்க்கு வளைகாப்பு நடத்தி உறவினர்களுக்கு விருந்து வைத்த காணொளி சமூக ஊடகங்களில் அதிவேகத்தில் பகிரப்பட்டு வருகிறது.
மேட்டூரை அடுத்துள்ள மேச்சேரி இந்திரா நகரைச் சேர்ந்த புகைப்படக் கலைஞரான நடராஜன், கடந்த 20 மாதங்களாக 'ஹைடி' என்ற ஆண் பொமேரியன் நாயை வளர்த்து வருகிறார்.
இந்த நிலையில் இதற்கு ஜோடியாக ஒன்பது மாதங்களுக்கு முன்பு 'சாரா' என்ற மற்றொரு பெண் பொமேரியன் நாயை வாங்கி வளர்த்து வந்தார்.
இதையடுத்து தற்பொழுது 'சாரா' கர்ப்பம் தரித்துள்ள நிலையில், பெண்களுக்கு நடத்தப்படுவதை போலவே வளைகாப்பு நடத்த வேண்டுமென மகள்கள் ஹேமா, ஹரிணி ஆகியோர் விரும்பினர்.
இதற்கு அவர்கள் பெற்றோரும் சம்மதித்ததால் கடந்த 13ஆம் தேதி வளைகாப்பு அவரது இல்லத்தில் தடபுடலாக ஏற்பாடு செய்யப்பட்டது.
இரு நாய்களையும் தனித்தனியாக இரு நாற்காலிகளில் அமர வைத்து மஞ்சள், குங்குமம் இட்டு அதன் காலில் வளையல் மாற்றப்பட்டது. பின்னர் விழாவுக்கு வந்தவர்களுக்கு அறுசுவை உணவு பரிமாறப்பட்டது.
சாரவிற்கு வளையல் மாட்டிய சுமார் 30 பெண்களுக்கு வெற்றிலை பாக்கு, தட்டு, கண்ணாடி, சீப்பு, தாலிக் கயிறு, மஞ்சள், குங்குமம் ஆகியவை சீர்வரிசையாக வழங்கப்பட்டன. இந்த வளைகாப்பு நிகழ்ச்சி காணொளியாக எடுக்கப்பட்டு சமூக ஊடகங்களில் பதிவேற்றப்பட்டதால் அது தீயாகப் பரவி வருகிறது.

