சென்னை: வெளிநாடுகளில் பயன்படுத்தப்பட்டு வரும் அதி நவீன மருத்துவக் கருவிகளையும் தொழில்நுட்பங்களையும் தமிழ்நாட்டிற்குக் கொண்டு வரும் முயற்சியில் சென்னை ஆயிரம் விளக்குப் பகுதியில் உள்ள 'பிரிட்டிஷ் கவுன்சில்' களமிறங்கி உள்ளது.
சென்னையில் நடைபெற்ற விழாவில் வயிறு, குடல் சார்ந்த பல்வேறு பிரச்சினைகளையும் மிகத் துல்லியமாகக் கண்டறியும் ரோபோ இயந்திரத்தை மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிமுகப்படுத்தினார்.
இந்த அதிநவீன சாதனம் தமிழகத்தில் உள்ள மருத்துவமனைகளில் பயன்படுத்தப்பட உள்ளதாகவும் அவர் கூறினார்.
தொடர்ந்து அவர் பேசியபோது, "பல்வேறு நாடுகளையும் சேர்ந்த 15,000 பேருக்கு மேற்கொள்ளப்பட்ட மருத்துவ அறுவை சிகிச்சையின்போது இந்த அதிநவீன சாதனம் பயன்படுத்தப்பட்டுள்ளது.
"கர்ப்பப்பை நீக்க அறுவை சிகிச்சை உள்ளிட்ட பல்வேறு அறுவை சிகிச்சைகளுக்கும் இந்த மருத்துவச் சாதனத்தைப் பயன்படுத்த முடியும். இதன்மூலம் தமிழகத்தைச் சேர்ந்த ஏராளமான பெண்கள் பயன்பெற முடியும். மருத்துவத்துறையில் புதிய தொழில்நுட்பத்தை அமல்படுத்துவதில் தமிழகம் எப்போதும் முன்மாதிரியாக இருக்கும்," என்றார்.
அமெரிக்கா, லண்டன், மத்திய கிழக்கு நாடுகள் உள்ளிட்ட உலகின் பல பகுதிகளிலும் பணியாற்றும் தமிழ் பேசும் மருத்துவர்களை ஒன்றிணைத்து வெளிநாடுகளில் மருத்துவம், மருத்துவத் தொழில்நுட்பத்தின் கீழ் பயன்படுத்தப்படும் அதிநவீன மருத்துவ முறைகளைக் கொண்டுவருவதற்காக 'தமிழகத்துக்கு முதல் முன்னுரிமை' என்ற அமைப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது.
அந்த அடிப்படையில் மலேசியா, கரீபியன் தீவு போன்ற பகுதிகளில் 'லேப்ராஸ்கோப்பி' அறுவை சிகிச்சையின்போது உதவியாளர் இல்லாமல் இயக்கப்படும் அதிநவீன கேமராவை தமிழகத்தில் அறிமுகப் படுத்த இவ்வமைப்பு முயற்சி மேற்கொண்டது. இந்தக் கருவியை மருத்துவர்கள் தங்களது நெற்றியில் பொருத்திக்கொண்டு உதவியாளர் யாருமின்றி அறுவை சிகிச்சையை வெற்றிகரமாக செய்ய முடியும் எனக் கூறப்படுகிறது.

