சென்னை: கல்லூரி மாணவர்களுக்குப் போதை மாத்திரைகளை விற்று, அதன் மூலம் பணம் சம்பாதித்து சொகுசு வாழ்க்கை வாழ்ந்து வந்த 22 வயது இளம்பெண் உள்ளிட்ட ஆறு பட்டதாரி மாணவர்கள் கைது செய்யப்பட்டனர்.
இக்கும்பலிடம் இருந்து 7,125 போதை, கருக்கலைப்பு மாத்திரை களும் இரு மடிக்கணினிகள், 9 கைபேசிகள், ரூ.441,300 ரொக்கம், மூன்று இருசக்கர வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டன.
திருவள்ளூர் மாவட்டம், பூந்தமல்லியைச் சேர்ந்த ராஜலட்சுமியின் தலைமையின் கீழ் செயல்பட்டு வந்துள்ள இந்தக் குழுவினர், ஆந்திரா, புதுடெல்லி உள்ளிட்ட வெளிமாநிலங்களில் இருந்து போதை, கருக்கலைப்பு மாத்திரைகளைக் 'கூரியர்' மூலம் பெற்று சென்னை உள்பட மாநிலம் முழுவதும் விற்பனை செய்து வந்தது விசாரணையில் தெரியவந்தது.
இவர்கள் ஆறு பேரும் பட்டதாரிகள் என்பதும் தங்களுடன் கல்லூரிகளில் படித்த சக மாணவர்கள், முன்னாள் மாணவர்கள், போதைப் பழக்கத்திற்கு அடிமையானவர்களின் கைபேசி எண்களைப் பெற்று தனியாக வாட்ஸ்அப் குழுவைத் தொடங்கி அதன்மூலம் போதை மாத்திரைகளை விற்பனை செய்துவந்ததாகக் கூறியுள்ளனர்.
இதில் அதிக லாபம் கிடைத்ததால் இதையே தங்களது தொழிலாக ஆறு பேரும் கடந்த ஓராண்டாக செய்து வந்ததாகவும் கூறினர்.
இதையடுத்து, ராஜலட்சுமி, அவரது காதலன் முத்துப்பாண்டி, பூங்குன்றன், கோகுலன், கிஷோர், கிஷோர் குமார் ஆகிய ஆறு பேரும் கைது செய்யப்பட்டனர்.
இதற்கிடையே, மருத்துவரின் பரிந்துரை இல்லாமல் உட்கொள்ளும் இதுபோன்ற கருக்கலைப்பு மாத்திரைகளால் உயிருக்கே ஆபத்து ஏற்படும் அபாயம் உள்ள தாக மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர்.
கைதான ராஜலட்சுமி கல்லூரி மாணவர்களிடம் போதைப் பழக்கத்தை ஏற்படுத்தி, இந்த மாத்திரைகளை விற்பதற்கு மூளையாக செயல்பட்டதாக காவல்துறை அதி காரிகள் தெரிவித்தனர். விசாரணை தொடர்கிறது.

