சென்னை: முன்னாள் முதல்வா் ஜெயலலிதாவின் மரணம் தொடர்பாக விசாரணை நடத்தி வரும் ஆறுமுகசாமி ஆணையம் முன்பு முதன் முறையாக முன்னாள் முதல்வரும் அதிமுக ஒருங்கிணைப்பாளருமான ஓ பன்னீர்செல்வமும் சசிகலாவின் அண்ணன் மனைவி இளவரசியும் நேற்று முன்னிலையாகினர்.
இளவரசியிடம் நடத்தப்பட்ட விசாரணையின்போது, அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த மறைந்த முன்னாள் முதல்வா் ஜெயலலிதாவை தான் ஓரிருமுறை மட்டுமே கண்ணாடி வழியாக எட்டிப் பார்த்ததாகக் கூறினார்.
"மருத்துவமனையில் ஜெயலலிதா அனுமதிக்கப்பட்டிருந்தபோது அவரை சசிகலா மட்டுமே உடனிருந்து பார்த்துக்கொண்டார். நான் 75 நாள்களும் மருத்துவமனைக்குச் சென்று வந்தேன். ஆனால், ஓரிரு முறை மட்டுமே கண்ணாடி வழியாக ஜெயலலிதாவைப் பார்த்தேன்.
"கடந்த 2014ஆம் ஆண்டு சிறைக்குச் சென்றபோது ஜெயலலிதா உடல்நலக் குறைவுடனும் மிகுந்த மன உளைச்சலிலும் இருந்தார்," என வாக்குமூலம் அளித்து உள்ளார்.
இதுவரை எட்டு முறை ஆறுமுகசாமி ஆணையம் அழைப்பாணை அனுப்பியும் முன்னிலையாகாத ஓபிஎஸ், நேற்று முதல்முறையாக முன்னிலையானார்.
"ஜெயலலிதாவுக்கு நீரிழிவு நோய் இருந்ததைத் தவிர, அவருக்கு இருந்த வேறு உடல்நலக் குறைபாடுகள் குறித்து எனக்கு எதுவும் தெரியாது. அதேபோல், அவருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை முறைகள் குறித்தும் எனக்கு எதுவும் தெரியாது," என ஓ.பன்னீர்செல்வம் வாக்குமூலத்தில் கூறியுள்ளார்.
ஒட்டுமொத்தமாக, ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது முதல் அவரது இறப்பு வரை என்ன மாதிரியான சிகிச்சைகள் அளிக்கப்பட்டன, மருத்துவர்கள் யார் என்பது குறித்து தனக்கு எதுவுமே தெரியாது எனவும் ஓபிஎஸ் ெதரிவித்துள்ளார்.
ஓய்வுபெற்ற உயா்நீதிமன்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையிலான ஆணையம் மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு இப்போது மீண்டும் விசாரணையைத் தொடங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

