சென்னை: இரிடியம் விற்பனை மூலம் பல மடங்கு லாபம் கிடைக்கும் என்று ஆசை காட்டி தம்மிடம் இருந்து ரூ.1.75 கோடி ரூபாய் பணத்தைப் பெற்றுக்கொண்டு ராம்பிரபு என்பவர் மோசடி செய்துவிட்டதாக பிரபல திரைப்பட நடிகர் விக்னேஷ் சென்னை காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.
சென்னையில் உள்ள தமது கடைத்தொகுப்பில் ராம்பிரபு என்பவர் வாடகைக்கு இருந்ததாகவும் தம்முடன் நட்பாகப் பழகியதாகவும் விக்னேஷ் புகார் மனுவில் குறிப்பிட்டுள்ளார்.
இரிடியம் என்ற பொருளை மத்திய அரசின் அனுமதியுடன் ஆஸ்திரேலியாவில் உள்ள நிறுவனத்துக்கு விற்பனை செய்ததாகவும் அதன் மதிப்பு ரூ.3 லட்சம் கோடி என்றும் ராம்பிரவு கூறியதை விக்னேஷ் நம்பி உள்ளார்.
ராம்பிரபுவைச் சுற்றி எந்நேரமும் கைத்துப்பாக்கியுடன் பாதுகாலர்கள் இருந்துள்ளனர். தனது மதிப்பை அறிந்து மத்திய அரசு இவ்வாறு பாதுகாப்பு அளித்துள்ளது என்று அவர் கூறியதை விக்னேஷ் நம்பி உள்ளார்.
இந்நிலையில், இரிடியம் விற்கும் தொழிலை சட்டபூர்வமாக செய்வதாகவும் அதில் முதலீடு செய்தால் அதிக லாபம் கிடைக்கும் என்று ராம்பிரபு கூற, அதையும் நம்பிய விக்னேஷ், பணத்தை முதலீடு செய்வது என முடிவெடுத்துள்ளார்.
"என்னிடம் ரூ.5 லட்சம் கொடுத்தால், ரூ.500 கோடியாக உங்களுக்கு திருப்பித் தருவதாக நம்பிக்கை ஊட்டும் வகையில் பேசினார் ராம்பிரபு. அதை நம்பி எனது வங்கிக் கணக்கு மூலமாகவும் நண்பர்களிடம் நேரடிக் கடனாகவும் பெற்று ரூ.1.81 கோடி கொடுத்தேன்.
"அதற்கு பிறகு அவர் என்னிடம் பேசுவதை தவிர்த்தார். ஒரு முறை நேரில் சந்தித்தபோது, ரூ.500 கோடி கொள்கலன் லாரி மூலம் வருகிறது என்றும் வந்தவுடன் தருவதாகவும் சொன்னார். ஆனால், பணம் வரவில்லை," என்று விக்னேஷ் தமது புகார் மனுவில் கூறியுள்ளார்.
ராம்பிரபு என்பவர் மேலும் பலரிடம் இதேபோல் பணம் வசூலித்திருப்பது தெரியவந்தது என்றும் ஏற்கெனவே விருதுநகர் காவல்துறையினர் அவரை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர் என்றும் விக்னேஷ் தெரிவித்துள்ளார். ராம்பிரவு தற்போது கைதாகி உள்ள நிலையில், அவரிடம் ஐநூறுக்கும் மேற்பட்டவர்கள் ஏமாந்திருப்பதாகச் சொல்கிறார் விக்னேஷ்.