அமராவதி: தமிழக மின்வாரியத்தின் புதிய மின் திட்டத்தை தனியார் நிறுவனத்துக்கு ஒதுக்கி இருப்பதில் முறைகேடு நடந்து இருப்பதாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை குற்றம்சாட்டி உள்ளார்.
மொத்தம் 4,442 கோடி ரூபாய் மதிப்புள்ள அத்திட்டம் அனைத்து விதிமுறைகளையும் மீறி குறிப்பிட்ட நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
அண்ணாமலை தலைமையில் தமிழக பாஜக குழு ஒன்று நேற்று முன்தினம் ஆளுநர் ஆர்.என்.ரவியை சந்தித்தது. அப்போது பாஜக சார்பில் ஒரு கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.
இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய பாஜக மாநிலத் துணைத் தலைவர் வி.பி.துரைசாமி, தமிழகத்தின் நலன் குறித்தும் சட்டம் ஒழுங்கு குறித்தும் ஆளுநரிடம் பேசியதாகக் குறிப்பிட்டார்.
"மின்வாரிய ஒப்பந்தத்தை பெற்றுள்ள தனியார் நிறுவனம் குறித்து தெளிவான விளக்கத்தையும் அறிக்கையையும் ஆளுநரிடம் கொடுத்திருக்கிறோம். எங்களுடைய கோரிக்கையை கேட்டறிந்த ஆளுநர், அதுகுறித்து பரிசீலிப்பதாக தெரிவித்திருக்கிறார்," என்றார் வி.பி.துரைசாமி.
தமிழக மின்வாரியத் திட்டத்தை தனியார் நிறுவனத்திடம் ஒப்படைத்ததில் திமுக அரசு அனைத்து விதிகளையும் மீறி உள்ளதாக அண்ணாமலை டுவிட்டரில் குறிப்பிட்டுள்ளார்.
இதற்கிடையே பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை எந்தவிதமான ஆதாரங்களும் இன்றி தமிழக அரசு குறித்து அவதூறு பரப்புவதாக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.
மின் வாரியத்தின் மீதான குற்றச்சாட்டுகளை நிரூபிக்கவில்லை என்றால் அண்ணாமலை மீது சட்டரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சர் எச்சரித்துள்ளார்.

