மகனை கட்சியின் துணைப் பொதுச் செயலாளராக நியமித்ததற்கு கடும் எதிர்ப்பு
சிவகங்கை: மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கட்சிக் கொள்கைக்கு விரோதமாக தனது மகனை துணைப் பொதுச்செயலாளராக நியமித்துள்ளதாக அக்கட்சியின் மூன்று மாவட்டச் செயலாளர்கள் போர்க்கொடி உயர்த்தி உள்ளனர்.
இதையடுத்து வைகோவுக்கு இனி ஒத்துழைப்பு தருவதில்லை என முடிவெடுத்துள்ளதாக அவர்கள் பகிரங்கமாக அறிவித்துள்ளனர்.
மேலும், மதிமுகவை கலைத்துவிட்டு, திமுகவுடன் இணைக்க வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தி உள்ளனர். இதனால் மதிமுக வட்டாரங்களில் சலசலப்பு நிலவி வருகிறது. ஒரு தரப்பினர் வைகோவுக்கு ஆதரவு தெரிவித்துள்ள நிலையில், பத்து மாவட்டச் செயலாளர்கள் கட்சித் தலைமைக்கு எதிராக வரிந்து கட்டிக்கொண்டு செயல்படுவதாக கூறப்படுகிறது.
புலவர் செவந்தியப்பன் (சிவகங்கை), சண்முக சுந்தரம் (விருதுநகர்), செங்குட்டுவன் (திருவள்ளூர்) ஆகியோர் நேற்று முன்தினம் சிவகங்கையில் செய்தியாளர்களிடம் பேசும்போது, வைகோ தனது மகனை கட்சியின் துணைப் பொதுச் செயலாளராக நியமிக்க பத்துக்கும் மேற்பட்ட மாவட்டச் செயலாளர்கள் எதிர்ப்பு தெரிவித்ததாகக் குறிப்பிட்டனர்.
திமுகவில் குடும்ப அரசியல் இருப்பதாகக் கூறித்தான் திமுகவில் இருந்து மதிமுக பிரிந்தது என்று அவர்கள் நினைவூட்டினர்.
இதற்கிடையே, இம்மூவரும் சிவகங்கை மாவட்ட மதிமுக அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்திப்பதை அறிந்த வைகோ ஆதரவாளர்கள் திடீரென அங்கு திரளாகக் கூடி மூவருக்கும் எதிராக முழக்கங்கள் எழுப்பினர்.
இதையடுத்து இருதரப்புக்கும் இடையே மோதல் வெடிப்பதை தடுக்கும் பொருட்டு, அங்கு காவல்துறையினர் குவிக்கப்பட்டனர்.
அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை சமாதானப்படுத்தி கலைந்துபோகச் செய்தனர்.
வைகோவுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ள மாவட்டச் செயலாளர்கள் ஒருங்கிணைந்து கட்சித் தலைமைக்கு எதிராக போராட்டங்கள் நடத்த வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது. இதற்கிடையே கட்சி நிர்வாகிகளுடன் வைகோ தீவிர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார்.

