சென்னை: தமிழகத்தில் இனி பள்ளி மாணவர்கள் இருசக்கர வாகனங்களில் பள்ளிக்கு வரக்கூடாது என பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
அவ்வாறு இருசக்கர வாகனங்களில் வரும் மாணவர்களை பள்ளி வளாகத்திற்குள் அனுமதிக்கக்கூடாது என்றும் அந்த உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
சென்னை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பள்ளி, கல்லூரி மாணவர்கள் அடிக்கடி பந்தயம் கட்டி போக்குவரத்து நெரிசல் உள்ள முக்கிய சாலைகளில் இருசக்கர வாகனங்களை ஆபத்தான முறையில் ஓட்டிச் செல்கின்றனர்.
மேலும், பேருந்து படிக்கட்டுகளில் தொங்கியபடி செல்வது, பேருந்து தினம் கொண்டாடும்போது வரம்பு மீறுவது எனப் பல்வேறு ஒழுங்கீனமான நடவடிக்கைகளில் மாணவர்கள் ஈடுபடுவதாகப் புகார்கள் எழுந்துள்ளன.
இதையடுத்து, அரசு, தனியார் பேருந்துகளின் படிக்கட்டுகளில் தொங்கியபடி மாணவர்கள் பயணம் செய்வதை தடுக்க வேண்டும் என்றும் பேருந்தில் கூட்டமாக மாணவர்கள் செல்வதைத் தவிர்க்க பள்ளி முடிந்தபின் 15 நிமிட இடைவெளியில் மாணவர்களைத் தனித்தனி குழுக்களாகப் பிரித்து அனுப்ப வேண்டும் என்றும் பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
மேலும் ஒழுங்கீனமாக நடந்து கொள்ளும் மாணவர்களை பள்ளி நிர்வாகம் அடையாளம் காண கண்காணிப்பாளர்கள் நியமிக்கப்பட வேண்டும் என்றும் அத்தகைய மாணவர்களுக்கு உரிய நிபுணர்களைக் கொண்டு மனநல ஆலோசனை வழங்கப்பட வேண்டும் என்றும் பள்ளிக் கல்வித்துறை மேலும் அறிவுறுத்தி உள்ளது.
அண்மைக் காலமாக தமிழகப் பள்ளிகளில் மாணவர்கள் ஒழுங்கீனமாக நடந்து கொள்வதாகப் பல்வேறு புகார்கள் எழுந்துள்ளன.
தேனி மாவட்டத்தில் அரசுப்பள்ளி ஆசிரியரிடம் படிக்கும் மாணவரே மிரட்டும் தொனியில் பேசி உள்ளார்.
மற்றொரு பள்ளியில் ஆசிரியரைச் சுற்றி நின்று மாணவர்கள் பலமாகக் கைதட்டி கேலி செய்துள்ளனர்.
இதுபோன்ற சம்பவங்கள் குறித்து ஊடகங்களில் தொடர்ந்து செய்திகள் வெளியாகின்றன.

