சென்னை: இளம்பெண்ணை பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்திய விருதுநகரைச் சேர்ந்த திமுக உறுப்பினர் அக்கட்சியை விட்டு நீக்கப்பட்டுள்ள நிலையில், இது தொடர்பான வழக்கை காவல்துறையின் சிபிசிஐடி பிரிவு விசாரிக்கும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
பொள்ளாச்சியில் நடந்த கொடூர பாலியல் சம்பவத்தைப் போல் விருதுநகரிலும் ஒரு சம்பவம் அரங்கேறி உள்ளது.
அங்கு தனியார் ஆடை தயாரிப்பு நிறுவனத்தில் பணிபுரிந்து வந்த 22 வயது இளம்பெண்ணை திமுகவைச் சேர்ந்த ஹரிஹரன் என்பவர் காதலித்துள்ளார். இருவரும் அவ்வப்போது தனிமையில் சந்தித்துள்ளனர்.
அப்போது அந்தப் பெண்ணுக்குத் தெரியாமல் எடுக்கப்பட்ட காணொளியை அதே பகுதியைச் சேர்ந்த திமுக நிர்வாகி ஜீனைத் அகமது உள்ளிட்ட நான்கு பேர் பார்த்துள்ளனர்.
இதையடுத்து, அந்தக் காணொளிப் பதிவைக் காண்பித்து அந்த இளம்பெண்ணை சீரழித்துள்ளார் ஜீனைத் அகமது. அதேபோல், ஹரிஹரன் உள்ளிட்ட மேலும் ஏழு பேர் இதுபோன்று அத்துமீறி உள்ளனர். அவர்களில் இருவர் பள்ளி மாணவர்கள் ஆவர்.
ஒரு கட்டத்தில், இவர்களின் கொடுமையைத் தாங்கிக்கொள்ள முடியாத அந்த இளம் பெண் காவல்துறையில் புகார் அளித்ததை அடுத்து, நடந்த சம்பவங்கள் அம்பலமாகின.
இதையடுத்து, பள்ளி மாணவர்கள் இருவர், கூலித் தொழிலாளர்கள் இருவர் உள்ளிட்ட எட்டு பேரை காவல்துறை கைது செய்துள்ளது.
இந்நிலையில், குற்றவாளி களுக்கு கடும் தண்டனை வழங்க வேண்டும் என்று பல்வேறு கட்சித் தலைவர்களும் வலியுறுத்தியுள்ளனர்.
திமுக மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி முதல் கட்ட விசாரணையில், சிலர் கைது செய்யப்பட்டிருப்பது ஆறுதல் அளித்தாலும், இளம்பெண்ணை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கிய அனைவரும் கடுமையாகத் தண்டிக்கப்பட வேண்டும் எனக் கூறியுள்ளார்.
இந்நிலையில், பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த புகாரில் கைது செய்யப்பட்டுள்ள ஜீனைத் அகமது திமுகவில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

