ராமேசுவரம்: கடும் பொருளியல் நெருக்கடியை எதிர்கொண்டுள்ள இலங்கையில் இருந்து தமிழர்கள் பலர் தமிழகத்துக்கு வரத்தொடங்கி உள்ளனர்.
இலங்கையில் எந்தவிதமான அத்தியாவசியப் பொருள்களும் கிடைக்காமல் மக்கள் திண்டாடி வருவதாக அவர்கள் தெரிவித்தனர்.
இலங்கையில் இருந்து படகுகளில் வந்து சேரும் தமிழர்களை படகோட்டிகள் தனுஷ்கோடி அருகே உள்ள கடற்பகுதியில் காணப்படும் மணல்திட்டில் இறக்கிவிட்டு மீண்டும் இலங்கைக்கு திருப்பிச் சென்றுவிடுகின்றனர்.
மணல்திட்டில் யாரேனும் இருப்பது தெரியவந்தால் தமிழக மீனவர்கள் இந்திய கடலோர காவல் படைக்கு தகவல் தெரிவிக்க, அதன் பின்னர் அவர்கள் மீட்கப்படுகின்றனர்.
இந்நிலையில் இலங்கையில் இருந்து தினமும் சில குடும்பங்கள் தமிழகம் வந்து சேர்வதாகக் கூறப்படுகிறது.
அவர்களை மீட்டு உணவுப் பொருள்கள் வழங்கினாலும், கடலோரக் காவல் படையின் தகவலின் பேரில் காவல்துறையின் கியூ பிரிவு அவர்களிடம் விசாரணை நடத்தி, பின்னர் வழக்குப்பதிவு செய்கிறது.
அகதிகளாக வரும் இலங்கைத் தமிழர்கள் படகோட்டிகளிடம் 50 ஆயிரம், ஒரு லட்சம் ரூபாய் என பணம் கொடுத்ததாக கூறியுள்ளனர்.
இலங்கையில் உள்நாட்டுப் போரால் பாதிக்கப்பட்ட ஆயிரக்கணக்கான தமிழர்கள் முன்பு அகதிகளாக தமிழகத்தில் தஞ்சம் புகுந்தனர்.
உள்நாட்டுப் போர் முடிவுக்கு வந்ததும் அவர்களில் ஏராளமானோர் 2012ஆம் ஆண்டு மீண்டும் இலங்கை சென்றனர்.
இந்நிலையில், 10 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் அகதிகளாக தனுஷ்கோடிக்கு வந்துள்ளதாகவும் எரிபொருள் தட்டுப்பாடு தொடங்கிய பின் இலங்கையில் இருந்து ஏராளமான தமிழர்கள் தமிழகத்துக்கு அகதிகளாக வர காத்துக்கிடப்பதாகவும் தனுஷ்கோடி வந்தடைந்த இலங்கைத் தமிழர்கள் சிலர் கண்ணீர் மல்க கூறியுள்ளனர்.
இந்நிலையில், மேலும் ஐந்து குழந்தைகள், மூன்று பெண்கள் உட்பட பத்து பேர் நேற்று முன்தினம் மன்னாரில் இருந்து தனுஷ்கோடி வந்தடைந்தனர்.
இவர்கள் வந்த படகில் இன்ஜின் கோளாறு ஏற்பட்டு சுமார் 37 மணி நேரம் நடுக்கடலில் தத்தளித்துள்ளனர். அதன் பிறகு எப்படியோ அந்தக் கோளாறு சரிசெய்யப்பட்டு தனுஷ்கோடி வடக்கு பாலம் மீன்பிடி துறைமுகத்திற்கு வந்து சேர்ந்ததாக அவர்கள் தெரிவித்தனர்.
கடந்த சில தினங்களில் மட்டும் இலங்கையில் இருந்து 16 பேர் தனுஷ்கோடி பகுதிக்கு அகதிகளாக வந்து சேர்ந்துள்ளதாகக் கூறப்படுகிறது. இந்த எண்ணிக்கை தொடர்ந்து அதிகரிக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் தனுஷ்கோடி பகுதியில் இந்தியக் கடலோரக் காவல்படையினர் சுற்றுக்காவல் பணியை தீவிரப்படுத்தி உள்ளனர்.
இலங்கையில் நிலவும் கடும் பொருளியல் நெருக்கடியால் பாதிப்பு

