நடிகா் சிம்புக்கு சொந்தமான கார் மோதி 70 வயது முதியவர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சிகள் வியாழக்கிழமை (மார்ச் 24) சமூக வலைத்தளங்களில் வெளியாகி பரபரப்பாகப் பேசப்பட்டன.
இந்நிலையில், சிம்புவின் இன்னோவா காரை ஓட்டி விபத்தை ஏற்படுத்திய செல்வம், 29, என்பவரைக் கைது செய்து, ஒரே நாளில் அவரை இன்று பிணையில் விடுவித்தது பாண்டிபஜார் போக்குவரத்து புலனாய்வுக் காவல்துறை.
அந்த வாகனம் நடிகர் சிம்புவுக்குச் சொந்தமானது என்பதும் விபத்து நடந்தபோது வாகனத்தில் சிம்புவின் தந்தை டி.ராஜேந்தரும் இருந்தார் என்பதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
சென்னை தேனாம்பேட்டை, இளங்கோ தெருவில் கடந்த 18ஆம் தேதி சாலையைக் கடக்க முயன்ற முதியவா் மீது அந்த வழியாகச் சென்ற காா் மோதியது.
இதில் பலத்த காயமடைந்த அந்த முதியவரை பொதுமக்கள் மீட்டு ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். சிகிச்சை பலனின்றி அந்த முதியவா் உயிரிழந்தார். அவா், தியாகராயர் நகா் பகுதியைச் சோ்ந்த முனுசாமி என்ற மாற்றுத்திறனாளி எனத் தெரியவந்தது.

