ராமேஸ்வரம்: தமிழகத்தில் அடைக்கலம் புகுந்துள்ள இலங்கைத் தமிழ் அகதிகள் தமிழர் மறுவாழ்வு முகாம்களில் தங்கவைக்கப்படுவார்கள் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.
இலங்கைத் தமிழர்கள் 16 பேரையும் சிறையில் அடைக்கும் உத்தரவு நிறுத்திவைக்கப்பட்டுள்ள நிலையில், மனிதாபிமான அடிப்படையில் அவர்கள் அனை வரையும் மண்டபம் அகதிகள் மறுவாழ்வு முகாமில் தங்க வைக்க அரசு சிறப்பு உத்தரவைப் பிறப்பித்துள்ளது.
அத்துடன், இம்முகாமில் 150 வீடுகள் தயார்நிலையில் வைக்கப்பட்டுள்ளதாகவும் உணவு வழங்குவதற்கு என 30 சமையல்காரர்களும் உதவியாளர்களும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
இலங்கையில் நிலவும் கடும் பொருளாதார நெருக்கடி காரணமாக, இலங்கைத் தமிழர்கள் 16 பேர் அகதிகளாக கடந்த இரு நாள்களாக தமிழகத்தில் அடைக்கலம் புகுந்துள்ளனர்.
இவர்களைப் போல் இன்னும் ஆயிரக்கணக்கான மீனவக் குடும்பங்கள் வேலை இழப்பு, விலைவாசி உயர்வு, வாழ்வாதாரம் பாதிப்பு உள்ளிட்ட காரணங்களால் ஓரிரு நாள் களில் தமிழகம் வர திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் குறிப்பிட்டுள்ளன.
இதையடுத்து, நாகை, கோடியக் கரையில் அகதிகளின் வருகையை ரோவர் கிராப்ட் சுற்றுக்காவல் கப்பல் கண்காணித்து வருகிறது.
முன்னதாக, தனுஷ்கோடி கடல் துறை அதிகாரிகள், 16 இலங்கைத் தமிழர்களும் உரிய ஆவணங்கள் இன்றி சட்டவிரோதமாக தமிழகத்திற்குள் நுழைந்ததாக வழக்குப் பதிந்து, ராமேஸ்வரம் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தினர்.
வழக்கை விசாரித்த நீதிபதி, அவர்களைப் புழல் சிறையில் அடைக்க உத்தரவிட்டிருந்தார்.
ஒன்பது வயது சிறுவனை வேலூரில் உள்ள உறவினர் வீட்டில் ஒப்படைக்கவும் இரண்டு கைக்குழந்தைகளைத் தாயுடன் சேர்த்தே சிறைக்கு அனுப்பவும் சிறையில் அவர்களுக்குத் தேவையான வசதிகளைச் செய்து கொடுக்கவும் நீதிபதி உத்தரவிட்டிருந்தார்.
இந்தச் சூழலில் அகதிகளாக வந்தவர்களை சிறையிலடைக்க வேண்டாம். மனிதாபிமான அடிப்படையில் அவர்களை மறுவாழ்வு முகாமில் தங்கவைக்க நடவடிக்கை எடுக்குமாறு தமிழக அரசு சிறப்பு உத்தரவைப் பிறப்பித்தது.