மதுரை: மதுரையில் தெப்பக்குளம் மாரியம்மன் கோயில் நிகழ்ச்சியில் பரதம் ஆடிய பரத நாட்டியக் கலைஞர் காளிதாஸ் உயிரிழந்த சம்பவத் தால் கோயில் பக்தர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
வண்டியூர் தெப்பக்குளம் மாரியம்மன் கோயிலில் பரதம், கரகாட்டம், ஒயிலாட்டம், மயிலாட்டம் என பல்வேறு நடன நிகழ்ச்சிகளுடன் பங்குனி திருவிழா வருடந்தோறும் நடைபெறும்.
இவ்வாண்டு விழா புதன்கிழமை இரவு நடைபெற்றது. அப்போது பூச்சொரிதல் விழாவில் பரதநாட்டியக் கலைஞர் காளிதாசின் பரதநாட்டிய நிகழ்ச்சி நடைபெற்றது.
'எல்லாம் வல்ல தாயே' என்ற பாடலுக்கு தானும் தனது மாணவர்கள் மற்றும் மகளுடன் அவர் நடனமாடினார்.
அந்த சமயத்தில் நெஞ்சை பிடித்தபடி நாற்காலியில் அவர் அமர்ந்தார். அதே நிலையிலேயே அவரது உயிர் பிரிந்தது.
திரு காளிதாஸ், 54, இளம் வயதிலேயே நாட்டியம் மீது ஆர்வம் கொண்டவர். ஒரு நாட்டியப் பள்ளியையும் அவர் நடத்தி வருகிறார். அவரது மகன் விஷ்வ ஹர்ஷன் மிருதங்க வித்துவானாகவும் மகள் பிரியதர்ஷினி பரதநாட்டியக் கலைஞராகவும் மனைவி பானுமதி கர்நாடக சங்கீத ஆசிரியையாகவும் கலைக்குத் தொண்டாற்றி வருகின்றனர்.
'ஆடல் வல்லான்' விருது, 'கெளரவ முனைவர் பட்டம்', ஆயிரத்துக்கும் மேற்பட்ட பதக்கங்களை வாங்கியுள்ள காளிதாஸ், தனக்கு 'கலைமாமணி விருது' கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பிலும் இருந்துஉள்ளார். இந்த நிலையில் தெப்பக்குளம் மாரியம்மன் கோவில் நிகழ்ச்சியில் பரதம் ஆடியபோது அவரது உயிர் பிரிந்தது பக்தர்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. "திடீர் இறப்புக்கு என்ன காரணம் என்று தெரியவில்லை. மூன்று நாள்களாக அவர் சோர்வுடன் இருந்ததாக அவருடன் பணியாற்றியவர்கள் கூறினர். சில நாள்களுக்கு முன்பு அவருக்கு சர்க்கரை அளவு சீராக இருப்பதையும் உறுதி செய்தோம்," என்று பானுமதி கூறியுள்ளார்.