தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள குலசேகரப்பட்டினத்தில் மிக விரைவில் ராக்கெட் ஏவுதளம் அமைக்கப்பட உள்ளதாக இஸ்ரோவின் முன்னாள் தலைவர் டாக்டர் கே.சிவன் தெரிவித்துள்ளார்.
இதற்கான நிலத்தை கையகப்படுத்தும் பணிகளுக்கு ஒப்புதல் அளித்துள்ள மத்திய அரசுக்கும் தமிழக அரசுக்கும் அவர் நன்றி தெரிவித்துள்ளார்.
இதுபற்றி செய்தியாளர்களிடம் கே.சிவன் கூறுகையில், "இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையமான இஸ்ரோ (ISRO), இந்திய செயற் கைக் கோள்களையும் மற்ற நாடுகள் தயாரிக்கும் செயற்கைக் கோள்களையும் ஆந்திராவில் உள்ள ஸ்ரீஹரிகோட்டா ஏவுதளங்களில் இருந்து விண்ணுக்குச் செலுத்தி வருகிறது.
"விண்வெளி ஆய்வுகளுக்காக நாட்டின் எதிர்காலத் தேவை, செலவினம், பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு அம்சங்களின் அடிப்படையில் இந்தியாவிற்கு மற்றோர் ஏவுதளம் அவசியமாக உள்ளது. அதன்படி, புதிய ராக்கெட் ஏவுதளம் விரைவில் தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் பகுதிக்கு அருகிலுள்ள குலசேகரப்பட்டினத்தில் அமைக்கப் பட உள்ளது.
"இந்த ஏவுதளத்திற்காக நிலம் கையகப்படுத்த மத்திய அரசும் தமிழக அரசும் ஒப்புதல் அளித்ததில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். அங்கு மிக விரைவில் நாட்டின் இரண்டாவது ராக்கெட் ஏவுதளம் அமையும்," என்று கூறியுள்ளார்.
தமிழ்நாடு அரசு புதிய ஏவுதளம் அமைப்பதற்காக தூத்துக்குடியில் 961 ஹெக்டர் பரப்பளவு நிலத்திற்கு அனுமதி அளித்துள்ளது.
'சந்திராயன் 2' திட்டம் எதிர் பார்த்தபடி வெற்றிபெறாமல் தோல்வி அடைந்தபோதிலும் பிரதமர் மோடி ஒவ்வொரு விஞ்ஞானி யிடமும் ஆறுதலாகப் பேசி, முயற்சிகளைக் கைவிடாமல் தொடரும்படி பெருந்தன்மையோடு கேட்டுக்கொண்டதை நினைவுகூர்ந்த அவர், 'சந்திராயன் 3' விரைவில் வெற்றி கரமாக விண்ணில் செலுத்தப்படும் என்றும் தெரிவித்தார்.

