சென்னை: கடந்த ஆண்டின் ஏப்ரல் முதல் டிசம்பர் மாதங்களில் தமிழகத்தில் அந்நிய நேரடி முதலீடு 41.5 விழுக்காடு அதிகரித்திருப்பதாக தகவல் வெளிவந்துள்ளது.
அந்தக் காலகட்டத்தில் இந்தியாவுக்கு வந்த அந்நிய முதலீடு ரூ.17,696 கோடி (கிட்டத்தட்ட $2.4 பில்லியன்).
2020ஆம் ஆண்டு இதே காலகட்டத்தில் தமிழகத்தில் மேற்கொள்ளப்பட்ட அந்நிய நேரடி முதலீட்டின் மதிப்பு ரூ.12,504 கோடி (சுமார் $1.7 பில்லியன்). கொரோனா கிருமித்தொற்றின் முதல் அலை கடுமையாக வீசிய நேரம் அது.
2021-22 நிதி ஆண்டின் மூன்றாவது காலாண்டான அக்டோபர் முதல் டிசம்பர் வரை தமிழகத்திற்கு வந்த வெளிநாட்டு முதலீட்டின் அளவு 53 விழுக்காடு அதிகரித்து ரூ,9,332 கோடியாக இருந்தது.
மத்திய வர்த்தக, தொழில்துறை அமைச்சின்கீழ் செயல்படும் தொழில்துறை மற்றும் உள்நாட்டு வர்த்தக ஊக்கமளிப்புத் துறை வெளியிட்ட புள்ளிவிவரங்கள் இவை.
மேலும் அதன் அறிக்கையில், "இந்திய அளவில் செய்யப்பட்ட அந்நிய நேரடி முதலீட்டில் தமிழகத்திற்கு வந்த முதலீடுகளின் விகிதம் 4 விழுக்காட்டிலிருந்து 5 விழுக்காடாக உயர்ந்துள்ளது.
"தேசிய அளவில் அதிகஅளவு அந்நிய நேரடி முதலீட்டை ஈர்த்த மாநிலங்களில் தமிழகம் 5வது இடத்தில் இருக்கிறது. 2021 ஏப்ரல் முதல் செப்டம்பர் வரையிலான காலத்தில் தமிழகம் ரூ.8,364 கோடி முதலீட்டை ஈர்த்துள்ளது.
"அந்நிய நேரடி முதலீட்டை ஈர்த்த வகையில், மகாராஷ்டிரா மாநிலம் (26%) முதலிடத்திலும் கர்நாடகா (23%), குஜராத் (21%), டெல்லி (13%) அந்நிய நேரடி முதலீட்டை ஈர்த்துள்ளன. 2021ஆம் ஆண்டின் ஏப்ரல் முதல் டிசம்பர் வரையிலான காலத்தில் இந்தியாவுக்கு வந்த அந்நிய நேரடி முதலீடு 16 விழுக்காடு குறைந்து ரூ.3 லட்சத்து 19ஆயிரத்து 976 கோடியாக இருந்தபோதிலும்கூட தமிழகம் நோக்கி வந்த முதலீட்டில் வளர்ச்சி இருந்தது," எனக் கூறப்பட்டது.
தமிழகம் 2021ம் ஆண்டில் 302 கோடி டாலர் அளவுக்கு அந்நிய நேரடி முதலீட்டை ஈர்த்துள்ளதாக மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சு அண்மையில் மக்களவையில் தெரிவித்திருந்தது.
தமிழகத்துக்கான வளர்ச்சி ஆலோசனைக் குழுவில் இருக்கும் பூஜா குல்கர்னி கூறுகையில், "தமிழக அரசு கட்டுமானம், நிதிச்சேவை, வாகனத் துறை, மின்னணு மற்றும் இயந்திர உற்பத்தி, சில்லறை வர்த்தகம், தகவல்தொழில்நுட்ப சேவைப் பிரிவுகளில் அதிகமான அந்நிய நேரடி முதலீட்டை ஈர்த்துள்ளது.
"ஆனால் கொரோனா தொற்று காலத்தில் மற்ற எந்த மாநிலத்தையும்விட தமிழகத்தின் உற்பத்தித் துறைதான்அதிகமாகப் பாதிக்கப்பட்டது," என்றார்.