புதுடெல்லி: கலைஞர் அறிவாலய திறப்பு விழாவுக்காக இன்று டெல்லி செல்லும் முதல்வர் மு.க.ஸ்டாலின், அங்கு எதிர்க்கட்சித் தலைவர்களைச் சந்தித்துப் பேச உள்ளதாக ஊடகத் தகவல் தெரிவிக்கிறது.
ஏப்ரல் முதல் தேதியன்று இந்தச் சந்திப்புகள் நிகழும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அடுத்த நாடாளுமன்றத் தேர்தலையொட்டி பாஜகவுக்கு எதிராக வலுவான எதிர்க்கட்சிக் கூட்டணியை அமைக்கும் முயற்சியில் சில தலைவர்கள் ஈடுபட்டுள்ளனர்.
அவர்களில் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெலங்கானா முதல்வர் சந்திரசேகரராவ் ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்கள்.
இந்நிலையில், முதல்வராகப் பதவியேற்ற பின்னர் மூன்றாவது முறையாக டெல்லி செல்கிறார் மு.க.ஸ்டாலின். இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி அவர் ஏப்ரல் 1ஆம் தேதி காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, ராகுல் ஆகியோரையும் அதற்கு அடுத்தகட்டமாக கம்யூனிஸ்ட் கட்சிகளின் மூத்த தலைவர்களையும் அவர் சந்திக்க உள்ளதாகக் கூறப்படுகிறது.
மற்ற எதிர்க்கட்சித் தலைவர்களுடன் அவர் ஆலோசனை நடத்துவார் எனத் தெரிகிறது.
கலைஞர் அறிவாலய திறப்பு விழாவுக்கு வருகை தருமாறு சோனியா, ராகுல், மேற்கு வங்க முதல்வர் மம்தா உள்ளிட்டோருக்கு ஏற்கெனவே அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதனால் அறிவாலய திறப்பு விழா அரசியல் அரங்கில் முக்கியத்துவம் பெறும் நிகழ்வாகக் கருதப்படுகிறது.
நாடு திரும்பினார் முதல்வர்
இதற்கிடையே அரசு முறைப் பயணமாக வெளிநாடு சென்றிருந்த தமிழக முதல்வர் நேற்று முன்தினம் இரவு தனி விமானம் மூலம் சென்னை திரும்பினார்.
இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமது பயணத்தின்போது ஆறு முக்கிய நிறுவனங்களுடன் ரூ.6,100 கோடி மதிப்பிலான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போடப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டார். இதன் மூலம் 14,700 பேருக்கு வேலைவாய்ப்புகள் கிடைக்கும் என்றார் அவர்.
"துபாய் பயணம் வெற்றிகரமாக அமைந்தது. கடந்த அதிமுக ஆட்சியில் அனைத்து புரிந்துணர்வு ஒப்பந்தங்களும் வெறும் காகிதப் பூக்களாகவே இருந்தன," என்றார் முதல்வர் ஸ்டாலின்.

