மதுரை: மதுரை, சிங்கப்பூர் இடையே மீண்டும் நேரடி விமானச் சேவை நேற்று முதல் தொடங்கியது.
கொரோனா நெருக்கடி காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக இந்த வழித்தடத்தில் பயணிகள் விமானங்கள் இயக்கப்படவில்லை.
இந்நிலையில், கொரோனா கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டதை அடுத்து, மதுரை - சிங்கப்பூர் இடையேயான நேரடி விமானச் சேவை நேற்று மீண்டும் தொடங்கியது.
வாரந்தோறும் செவ்வாய், சனிக்கிழமை ஆகிய இரு தினங்களில் மதுரை, சிங்கப்பூர் இடையே ஏர் இந்தியா விமானங்களை இயக்குகிறது.
சிங்கப்பூரில் இருந்து (உள்ளூர் நேரப்படி) மாலை ஐந்து மணிக்குப் புறப்படும் விமானம், மாலை 6.40 மணிக்கு மதுரை விமான நிலையம் வந்தடையும். அதே விமானம் மதுரையில் இருந்து இரவு 9.35 மணிக்கு புறப்பட்டு சிங்கப்பூர் சென்றடையும்.
இத்தகவலை மதுரை விமானநிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதனால் பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

