சென்னை: தமிழக மீனவர்கள் பிரச்சினை ஒரு முடிவில்லாமல் நீண்டு கொண்டே போவதாக சென்னை உயர் நீதிமன்றம் கூறியுள்ளது.
மீனவர்களின் பிரச்சினைக்கு மத்திய, மாநில அரசுகள் விரைவில் நிரந்தர தீர்வு காண வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.
இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள தமிழக மீனவர்கள் 68 பேரை விடுவிக்க மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அகில இந்திய மீனவர் காங்கிரஸ் அமைப்பின் தேசிய துணைத்தலைவர் ஆம்ஸ்ட்ராங் பெர்னாண்டோ வலியுறுத்தி உள்ளார்.
இது தொடர்பாக அவர் உயர் நீதிமன்றத்தையும் அணுகி உள்ளார். இந்த வழக்கு தலைமை நீதிபதி தலைமையிலான அமர்வின் முன்பு நேற்று முன்தினம் விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக மீனவர்கள் எதற்காக எல்லை தாண்டி செல்ல வேண்டும்? என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.
"இந்த விவகாரம் தொடர்பாக இலங்கை நீதிமன்றத்தைதான் அணுக வேண்டும். அன்னிய நாட்டுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட முடியாது. தமிழக மீனவர்களின் கைதுக்கு அனுதாபம் மட்டுமே தெரிவிக்க முடியும்.
"இந்திய அரசின் வெளியுறவு அமைச்சின் அதிகாரிகள்தான் தமிழக மீனவர்களை விடுவிக்க தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்," என நீதிபதிகள் தெரிவித்தனர்.
இதற்கிடையே, எல்லை தாண்டி மீன் பிடித்த குற்றச்சாட்டின் பேரில் ராமேசுவரம் மீனவர்கள் 4 பேரை இலங்கை கடற்படை கைது செய்தது.
இலங்கை கடற்படையால் ஏற்கெனவே கைது செய்யப்பட்ட ராமேசுவரம், மண்டபம் பகுதி மீனவர்கள் 16 பேரை விடுதலை செய்ய வலியுறுத்தி கடந்த சில நாள்களாக ராமேசுவரத்தில் போராட்டம் நடைபெற்றது. அதன் பின்னர் ஐந்நூற்றுக்கும் மேற்பட்ட படகுகளில் நேற்று முன்தினம் காலை மீண்டும் மீன்பிடிக்க கடலுக்குச் சென்றனர்.
இந்த நிலையில் நான்கு மீனவர்களை கைது செய்த இலங்கை கடற்படையினர், அவர்களது விசைப்படகையும் பறிமுதல் செய்துள்ளனர். இதனால் மீனவர்கள் கொந்தளிப்பில் உள்ளனர்.

