சென்னை: துபாய், அபுதாபி பயணம் ஆக்கபூர்வமாக அமைந்தது என்றும் ரூ.6,100 கோடி ரூபாய் முதலீட்டுக்கான ஒப்பந்தங்கள் போடப்பட்டுள்ளதாகவும் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
திரு ஸ்டாலின் முதல்வராக தனது முதல் வெளிநாட்டுப் பயணத்தை முடித்துக்கொண்டு செவ்வாய்க்கிழமை சென்னை திரும்பினார். விமான நிலையத்தில் அவரை நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தலைமையிலான அமைச்சர்கள் வரவேற்றனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் மு.க.ஸ்டாலின் பேசினார்.
"என்னுடைய பயணம் வெற்றி கரமாக, மகிழ்ச்சிகரமாக அமைந்தது. ஆறு முக்கிய தொழில் நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போடப்பட்டுள்ளன. இரும்புத் தளவாடங்கள் துறையைச் சேர்ந்த 'நோபல் ஸ்டீல்ஸ்' நிறுவனத்தோடு ரூ.1,000 கோடி மதிப்பிலான ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது.
"ஜவுளித்துறையைச் சார்ந்த 'ஒயிட் அவுஸ்' நிறுவனத்துடன் ரூ.500 கோடிக்கு ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. உணவுத்துறையைச் சேர்ந்த 'டிரான்ஸ் வேர்ல்ட்' குழுமத் தோடு ரூ.100 கோடி மதிப்பில் ஒப்பந்தமும் மருத்துவ துறையைச் சார்ந்த 'அஸ்டர் டி.எம். ஹெல்த் கேர்' நிறுவனத்தோடு ரூ.500 கோடி மதிப்பில் ஒப்பந்தமும் போடப்பட்டு உள்ளது. சரக்குப் போக்குவரத்து நிறுவனத்தைச் சேர்ந்த 'ஷரப்' நிறு வனத்துடன் ரூ.500 கோடி மதிப்பில் ஒப்பந்தம் போடப்பட்டிருக்கிறது. உணவு பதப்படுத்தும் தொழில் மற்றும் கட்டுமானத்துறையைச் சார்ந்த 'லுலு' நிறுவனத்தோடு ரூ.3,500 கோடி மதிப்பில் ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது.
"இந்த ஆறு நிறுவனங்களுடன் ரூ.6,100 கோடி மதிப்புள்ள ஒப்பந்தங்கள் போடப்பட்டுள்ளன," என்று மு.க. ஸ்டாலின் அறிவித்தார்.
இவற்றின் மூலமாக 14,700 பேருக்கு வேலைவாய்ப்பு உருவாகும் என்று அவர் சொன்னார்.
துபாய், அபுதாபியில் முக்கிய துறைகளைச் சேர்ந்த அமைச்சர் களையும் அரசு அதிகாரிகளையும் பெரிய தொழில் நிறுவனங்களின் தலைவர்களையும் சந்தித்ததாக அவர் கூறினார்.
"பெரிய நிதி மேலாண்மை நிறுவனங்கள் பல தமிழகத்தில் புதுப்பிக்கத்தக்க மின் உற்பத்தித் திட்டங்கள், சிறு துறைமுகங்கள் மேம்பாடு, உணவு பதப்படுத்துதல், தொழில் பூங்காக்கள் உருவாக்கக்கூடிய திட்டங்களில் முதலீடு செய்திட முன்வந்துள்ளன.
"தமிழகத்தில் தொழில் முதலீட்டுக்கு ஏற்ற சூழல் இருப்பதை நான் தெளிவாக எடுத்துச்சொல்லி இருக்கிறேன். தமிழ்நாட்டில் நிலவக்கூடிய, தொழில் தொடங்க உதவக்கூடிய சாதகமான சூழ்நிலை அமைந்திருப்பதை எல்லோரும் அங்கே என்னை பாராட்டினார்கள். தமிழகத்தையும் ஒட்டுமொத்தமாக பாராட்டினார்கள்," என்றார் முதல்வர்.
துபாய், அபுதாபி வாழ் தமிழர் களுக்கு அவர் நன்றியும் தெரிவித்துக்கொண்டார்.
"அவர்கள் தந்த எழுச்சிமிகு வரவேற்பு, தமிழ்நாடு போன்ற உணர்வை ஏற்படுத்தியது," என்று முதல்வர் குறிப்பிட்டார்.

