திருச்சி: திருச்சியில் இருந்து ரூ.40 லட்சம் லஞ்சப் பணத்துடன் சென்னை சென்றுகொண்டிருந்த ஆதிதிராவிடர் நலத்துறை துணை ஆட்சியரை விழுப்புரத்தில் மடக்கிய லஞ்ச ஒழிப்புக் காவலர்கள் அவரிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருச்சி மாவட்ட ஆதிதிராவிடர் நலத்துறை துணை ஆட்சியராகப் பணியாற்றி வருபவர் சரவணகுமார். அந்தத் துறையில் காலியாக உள்ள சமையலர் உள்ளிட்ட பல்வேறு பணிகளில் ஊழியர்களை நிரப்ப இவர் லஞ்சம் வசூலித்ததாகக் கூறப்படுகிறது.
வசூல் செய்த பணத்துடன் சரவணகுமார் காரில் சென்னை ெசல்வதாக கிடைத்த தகவலின் அடிப்படையில், திருச்சி லஞ்ச ஒழிப்பு காவலர்கள், அவரை பின்தொடர்ந்து விரட்டி வந்துள்ளனர்.
ஆனால், அவர்களால் சரவணகுமார் வந்த வாகனத்தை மடக்கமுடியாத நிலையில், இதுகுறித்து விழுப்புரம் மாவட்ட லஞ்ச ஒழிப்பு காவலர்களுக்குத் தகவல் அளித்தனர்.
இதையடுத்து, சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில், கெடிலம் என்ற இடத்தில் சரவணகுமார் வந்த வாகனத்தை மடக்கிய போலிசார், அந்த வாகனத்தில் கட்டுக்கட்டாக ரூ.500 பணக்கட்டுகள் இருந்ததைக் கண்டு அசிர்ச்சி அடைந்தனர். கணக்கிட்டுப் பார்த்ததில் ரூ.40 லட்சம் பணம் இருந்தது தெரியவந்தது.
முதலில் பணம் குறித்து தனக்கு எதுவுமே தெரியாது என்று மறுத்துவிட்ட சரவணகுமார், தொடர் விசாரணையில் லஞ்சம் குறித்து ஒப்புக்கொண்டதாகத் தெரியவந்துள்ளது.
வசூலித்த பணத்தை சென்னையில் உள்ள மேலதிகாரிக்கு கொண்டுசென்றதாக அவர் வாக்குமூலம் அளித்த நிலையில், விசாரணையைக் காவல்துறையினர் தீவிரப்படுத்தி உள்ளனர்.

