தமிழர்களின் விழாக்களிலும், சடங்குகளிலும் மங்கள இசைக்கு ஒரு தனிச்சிறப்பு உண்டு. தவில், நாதஸ்வரம் இல்லாத ஒரு சுப நிகழ்ச்சி உள்ளதா? அப்படி சிறப்புவாய்ந்த நாயனத்துக்கு மேலும் ஒரு சிறப்பு.
நரசிங்கம்பேட்டை நாதஸ்வரத்துக்கு இந்திய அரசாங்கம் புவிசார் குறியீடு வழங்கியுள்ளது.
ஒரு குறிப்பிட்ட புவிசார்ந்த இடத்தையோ அல்லது தோற்றத்தையோ குறிக்கும் பொருளுக்குப் புவிசார் குறியீடு அங்கீகாரம் அளிக்கப்படுகிறது. அந்தப் பொருளின் தரத்துக்கும், நன்மதிப்புக்கும் சான்றாக இந்த குறியீடு விளங்குகிறது.
தஞ்சாவூர் நரசிங்கம்பேட்டை நாதஸ்வரத்திற்கு எட்டு ஆண்டு போராட்டத்தின் பிறகு இந்தச் சிறப்பு கிடைத்துள்ளது.
17ஆம் நூற்றாண்டிலிருந்து பாரம்பரியமாக இசைக்கப்பட்டு வருகிறது இந்த நாதஸ்வரம்.
ஆச்சாமரம் எனும் வகை மரத்திலிருந்து இது பாரம்பரியமாக தயாரிக்கப்படுகிறது. நரசிங்கம்பேட்டையில் தற்போது 20 குடும்பங்கள் மட்டுமே இதைத் தயாரிக்கின்றனர்.
ஏற்கனவே தஞ்சை வீணை, தஞ்சை ஓவியம், தஞ்சாவூர் பொம்மை, திருபுவனம் பட்டு புடவை, நாச்சியார்கோவில் குத்துவிளக்கு உள்ளிட்ட ஒன்பது பொருட்களுக்குப் புவிசார் குறியீடு கிடைத்துள்ள நிலையில் நாதஸ்வரமும் இந்தப் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளது. 10 பொருட்களுக்குப் புவிசார் குறியீடு கிடைத்த மாவட்டமாக தஞ்சாவூர் திகழ்கிறது.