சென்னை: தமிழகம் முழுவதும் சுமார் 700 ஹெக்டேர் பரப்பளவில் பரவியுள்ள சீமைக்கருவேல மரங்களை அகற்றும் முன்னோடி திட்டத்துக்காக ரூ.5.35 கோடி ஒதுக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.
முதற்கட்டமாக ஆனைமலை, முதுமலை, சத்தியமங்கலம் புலிகள் சரணாலயப் பகுதிகளிலும் தர்மபுரி மாவட்ட பகுதிகளிலும் 200 ஹெக்டேர் பரப்பளவில் உள்ள அந்நிய மரங்கள் அகற்றப்படும் என்று உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள அறிக்கையில் அரசு குறிப்பிட்டுள்ளது.
சீமைக்கருவேல மரங்களை பத்து ஆண்டுகளில் படிப்படியாக முழுமையாக அகற்ற இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாகவும் அரசு அறிக்கை தெரிவிக்கிறது.
தமிழகத்தில் உள்ள சீமைக்கருவேல மரங்களால் மாநிலத்தின் சுற்றுச்சூழல் பாதிக்கப்பட்டுள்ளதாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கூறியுள்ளார். எனவே அம்மரங்களை அடையாளம் கண்டு உடனடியாக அகற்ற அரசுக்கு உத்தரவிடக்கோரி வைகோ உள்ளிட்ட பலர் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளனர்.
இந்த வழக்குகளை விசாரித்த நீதிமன்றம் மாநிலம் முழுவதும் உள்ள சீமைக்கருவேல மரங்களை உடனடியாக அகற்ற அரசுக்கு உத்தரவிட்டது. இதையடுத்து மரங்களை அகற்றுவது தொடர்பான கொள்கையை வகுக்க அவகாசம் வழங்க வேண்டும் என்று அரசுத்தரப்பு கேட்டுக் கொண்டது.
இந்நிலையில் நேற்று முன்தினம் இந்த மனு மீதான விசாரணை நடந்தபோது சீமைக்கருவேல மரங்களை அகற்றுவது தொடர்பான வரைவு கொள்கை அரசு இணையத்தளத்தில் வெளியிடப்பட்டுள்ளதாகவும் இது தொடர்பாக பொதுமக்களிடம் கருத்துகள் கேட்கப்பட்டுள்ளதாகவும் அரசு வழக்கறிஞர் தெரிவித்தார்.
"சீமைக்கருவேல மரங்களை வெட்டுப் பணி நடைபெற்று வருகிறது. வெட்டப்பட்ட மரங்கள் அடுத்த 5 ஆண்டுகளில் மீண்டும் வளராமல் கண்காணிக்க திட்டம் வகுக்கப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் 196 வகையான அந்நிய மரங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன. இதில் சீமைக்கருவேலம் உள்ளிட்ட 23 வகையான மரங்கள் உடனடியாக அப்புறப்படுத்தப்பட வேண்டியவை என முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளது," என்றும் அரசு வழக்கறிஞர் தெரிவித்தார்.
இதையடுத்து இந்த வழக்கு விசாரணையை ஜூன் முதல் வாரத்துக்கு ஒத்தி வைப்பதாக நீதிபதிகள் தெரிவித்தனர்.

