சென்னை: வெளிநாடுவாழ் இந்தியரிடம் ரூ.12.50 கோடி பெற்றுக்கொண்டு மோசடி செய்த காங்கிரஸ் கட்சிப் பிரமுகரும் அவரது மனைவியும் அதிரடியாகக் கைது செய்யப்பட்டனர்.
இதையடுத்து சென்னையைச் சேர்ந்த 34 வயதான சுனிதா (படம்), அவரது கணவர் ரஞ்சித் மீது மோசடி வழக்கு பதிவாகி உள்ளது. ரஞ்சித் காங்கிரஸ் கட்சிப் பிரமுகர் ஆவார்.
சென்னையைச் சேர்ந்த 68 வயதான சீனிவாசன் என்பவர் சவூதி அரேபியாவில் ஏற்றுமதி நிறுவனம் நடத்தி வருகிறார். கொரோனா நெருக்கடி வேளையில், இந்தியாவுக்கு வந்த அவரால் பின்னர் சவுதிக்கு திரும்ப முடியவில்லை.
இந்நிலையில், சீனிவாசனிடம் கோடிக்கணக்கில் பணம் இருப்பதை அறிந்த ரஞ்சித், சுனிதா தம்பதியர் அவரை ஏமாற்றிப் பணம் பறிக்கத் திட்டமிட்டுள்ளனர்.
இதையடுத்து சீனிவாசனை எப்படியோ தொடர்புகொண்டு பேசி, நேரில் சந்தித்தனர். அப்போது பல்வேறு நிதி நிறுவனங்களை நடத்தி வருவதாகவும் அவற்றில் முதலீடு செய்தால் இரட்டிப்பு லாபம் கிடைக்கும் என்றும் இருவரும் கூறிய ஆசை வார்த்தைகளை நம்பியுள்ளார் சீனிவாசன்.
சென்னையில் அடுக்குமாடிக் குடியிருப்பில் ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து, தங்களது தலைமை அலுவலகம் போல் மாற்றியமைத்து இருவரும் ஆடிய நாடகத்தை முழுமையாக நம்பிய சீனிவாசன், கோடிக்கணக்கில் பணம் கொடுத்துள்ளார்.
அவரை தங்கள் நிறுவனத்தின் இயக்குநர்களில் ஒருவராக சேர்த்துக் கொள்ளும் வாக்குறுதியும் ரஞ்சித் தம்பதியரால் அளிக்கப்பட்டது. மேலும், அவசரத் தேவை என்று கூறி சீனிவாசனிடம் இருந்து 32 பவுன் நகைகளையும் பெற்றுள்ளனர்.
இதற்கிடையே, சுனிதாவைவிட மூன்று வயது குறைந்தவரான ரஞ்சித்துக்கும் வேறொரு பெண்ணுக்கும் கள்ள உறவு இருந்ததாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து தன் மனைவிக்கு தகவல் கொடுத்ததாக எழுந்த சந்தேகத்தின் பேரில் தனது கார் ஓட்டுநரை தனி அறையில் அடைத்து வைத்து ரஞ்சித் சித்ரவதை செய்துள்ளார்.
"இதில் அந்த ஓட்டுநரின் கால் எலும்பு முறிந்தது. அவர் ரஞ்சித்திடம் இருந்து எப்படியோ தப்பித்து வந்து புகார் அளித்தார். அதன் பேரில் அந்தமானில் வைத்து ரஞ்சித் கைது செய்யப்பட்டார். அவர் மீது பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன.
பண மோசடி குறித்து சுனிதா மிக விரிவான வாக்குமூலம் அளித்துள்ளார்.

