ஈரோடு: பீகார் மாநிலத்தைச் சேர்ந்த ஒருவர் விபத்தில் சிக்கி இறந்துபோனதை அடுத்து, ஆத்திரம் அடைந்த வடமாநிலத் தொழிலாளர்கள் தமிழகக் காவல்துறையினரைத் தாக்கி காயப்படுத்திய சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மொடக்குறிச்சி அருகே நஞ்சை ஊத்துக்குளியில் தனியார் எண்ணெய் ஆலை ஒன்று செயல்பட்டு வருகிறது. பீகாரைச் சேர்ந்த கமோத்ராம் எனும் ஆடவர் நேற்று முன்தினம் அங்கு இரவுப் பணியில் ஈடுபட்டிருந்தார்.
அப்போது, பொருள்களை ஏற்றிச் செல்வதற்காக அங்கு சரக்கு லாரி ஒன்று வந்தது. கமோத்ராம் பின்னால் இருந்ததைக் கவனிக்காமல் ஓட்டுநர் லாரியைப் பின்புறமாக இயக்கினார். இதனால், லாரி கமோத்ராம்மீது மோத, பின்சக்கரத்தில் சிக்கி அவர் இறந்துபோனார்.
இதனையடுத்து, நூற்றுக்கணக்கில் அங்கு திரண்ட வடமாநிலத் தொழிலாளர்கள் சடலத்தை எடுக்கவிடாமல் போராட்டம் நடத்தினர். 12 லட்ச ரூபாய் காப்புறுதித் தொகை பெற்றுத் தருவதாக ஆலை நிர்வாகத்தினர் உறுதியளித்தனர். ஆனாலும், அதை ஏற்காத வடமாநிலத் தொழிலாளர்கள், 12 லட்ச ரூபாய் பணத்தை அல்லது காசோலையை உடனே தர வேண்டும் என்று வலியுறுத்தினர்.
தகவலறிந்து விரைந்து வந்த மொடக்குறிச்சி காவல் ஆய்வாளர் தீபா தலைமையில் காவல்துறையினர் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.
ஆனாலும், பேச்சுவார்த்தைக்கு இணங்காத தொழிலாளர்கள் உருட்டுக்கட்டையாலும் கற்களை வீசியும் தாக்குதலில் இறங்கினர். இதனால், அவர்களுக்கும் காவலர்களுக்கும் இடையே மோதல் வெடித்தது. முன்புறமிருந்த பாதுகாப்பு அறையும் மூன்று காவல்துறை வாகனங்களும் அடித்து நொறுக்கப்பட்டன. ஆய்வாளர் தீபா உள்ளிட்ட காவலர்கள் எழுவர் காயமுற்றனர்.
பின்னர் அதிகமான காவலர்கள் அங்கு வரவழைக்கப்பட்டு, நிலைமை கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. வடமாநிலத்தவர் 40 பேர் கைது செய்யப்பட்டனர்.

