சென்னை: மருத்துவக் கல்வியில் தமிழக அரசுப் பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்படும் 7.5% இடஒதுக்கீடு செல்லும் என்று சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி இருக்கிறது.
மருத்துவப் படிப்பில் சேர 'நீட்' தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதனால் தமிழ் வழியில் கல்வி பயிலும் கிராமப்புற, அரசுப் பள்ளி மாணவர்கள் பாதிக்கப்படுவர் எனக் கூறி, தமிழக அரசு அத்தேர்வை எதிர்த்து வருகிறது.
அதற்கேதுவாக, 'நீட்' தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்க வேண்டும் என்ற மசோதாவைச் சட்டமன்றத்தில் திமுக தலைமையிலான தமிழக அரசு நிறைவேற்றியது. ஆயினும், தமிழக ஆளுநர் அதற்கு இன்னும் ஒப்புதல் அளிக்கவில்லை.
முன்னதாக, கிராமப்புற மாணவர்களின் பொருளியல் நிலையைக் கருத்தில்கொண்டு, அதிமுக தலைமையிலான முந்திய அரசு மருத்துவக் கல்வியில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5% உள்ஒதுக்கீடு வழங்கப்படும் என்று அறிவித்தது.
அதனை எதிர்த்து, தனியார் பள்ளிகள் வழக்கு தொடுத்தன. அந்த உள்ஒதுக்கீட்டில் தங்களையும் சேர்த்துக்கொள்ளக் கோரி, அரசு உதவி பெறும் பள்ளிகளும் நீதிமன்றத்தை நாடின.
இவ்வழக்கில், "மாணவர்களுக்கு இடஒதுக்கீடு வழங்க மாநில அரசுக்கு அதிகாரம் உண்டு. அதனால், அரசுப் பள்ளி மாணவர்களுக்கு தமிழக அரசு வழங்கிய 7.5 விழுக்காடு உள்ஒதுக்கீடு செல்லும். ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு இடஒதுக்கீடு குறித்து மறுஆய்வு செய்து முடிவெடுக்க வேண்டும்," என்று உயர் நீதிமன்றம் நேற்று தீர்ப்பளித்தது.
அத்துடன், உள்ஒதுக்கீட்டிற்கு எதிராகத் தொடரப்பட்ட வழக்குகள் அனைத்தும் தள்ளுபடி செய்யப்படுவதாக நீதிபதிகள் அறிவித்தனர்.
'கல்விச் செலவை அரசே ஏற்கும்'
இந்நிலையில், "இது வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பு. முன்னுரிமை அடிப்படையிலான இடஒதுக்கீட்டிற்கு உயர் நீதிமன்றம் அளித்துள்ள மிகப் பெரிய அங்கீகாரம். திமுக ஆட்சிக்கு வந்தபின், சமூக நீதிக்கான சட்டப் போராட்டத்தில் கிடைத்த 3வது வெற்றி," என்று தமிழக முதல்வர் சட்டமன்றத்தில் உரையாற்றியபோது குறிப்பிட்டார். மேலும், 7.5% உள்ஒதுக்கீட்டின்கீழ் மருத்துவப் படிப்பில் சேரும் அரசுப் பள்ளி மாணவர்களின் கல்விச் செலவு முழுவதையும் அரசே ஏற்கும் என்றும் அவர் தெரிவித்தார்.

