"இந்தியாவைக் காப்பாற்ற வேண்டுமெனில் முதலில் மாநிலங்களைக் காப்பாற்ற வேண்டும்"
திருவனந்தபுரம்: இந்தியாவைக் காப்பற்ற வேண்டும் எனில் முதலில் மாநிலங்கள் காப்பாற்றப்பட வேண்டும் என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
மாநிலங்களைப் பழிவாங்குவதாக நினைத்து மத்திய அரசு மக்களைப் பழிவாங்குகிறது என்று அவர் குற்றம்சாட்டி உள்ளார்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் 23வது தேசிய மாநாடு கேரள மாநிலம் கண்ணூரில் நேற்று முன்தினம் நடைபெற்றது.
அதில் கலந்துகொண்டு பேசிய அவர், மத்திய அரசு ஆளுநர்களை வைத்து மாநிலங்களை ஆட்சி செய்ய நினைப்பது முறையல்ல என்றும் ஆளுநர்கள் ஜனநாயகத்திற்கு எதிராக செயல்படுவதாகவும் சாடினார்.
"ஒரே நாடு, ஒரே தேர்தல், ஒரே மொழி என மாற்ற அவர்கள் முயற்சி செய்கிறார்கள். ஆனால் மாநிலங்கள் அதிக அதிகாரங்கள் கொண்டதாக உருவெடுக்க இந்திய அரசியல் அமைப்பை மாற்ற வேண்டும்," என்றார் முதல்வர் மு.க.ஸ்டாலின்.
வேற்றுமையில் ஒற்றுமை கொண்ட இந்தியாவில் ஒற்றை தன்மையை உருவாக்க முயற்சி மேற்கொள்ளப்படுவதாகக் குறிப்பிட்ட அவர், ஆங்கிலேயர் ஆட்சியில் கூட ஒற்றை தன்மை அதிகாரங்கள் இல்லை என்றார்.
"தமிழக சட்டப்பேரவையியல் நீட் விலக்கு மசோதோ இருமுறை நிறைவேற்றப்பட்ட நிலையில், ஆளுநர் இன்றுவரை அதை அதிபருக்கு அனுப்பவில்லை என்றார்.
"மாநில வளர்ச்சிக்கான திட்டக்குழு, தேசிய வளர்ச்சிக் குழுக்களை மத்திய அரசு கலைத்துவிட்டது. நாடாளுமன்றத்தில் எவ்வித விவாதங்களும் இன்றி சட்டங்களை இயற்றுகிறது பாஜக.
"வேற்றுமையில் ஒற்றுமை கொண்ட இந்தியாவில் ஒற்றை தன்மையை உருவாக்க முயற்சி. ஆங்கிலேயர்கள் செய்ய நினைக்காததைக்கூட பாஜக செய்ய முயல்கிறது," என்று முதல்வர் ஸ்டாலின் மேலும் கூறினார்.
தனது உரையில், மத்திய அரசை கடுமையாகச் சாடிய முதல்வர் மு.க.ஸ்டாலின், தமது உரையின்போது ஓரிரு நிமிடங்கள் மலையாளத்தில் பேசினார். இதற்குப் பலத்த கைதட்டல் கிடைத்தது.
மேலும், மாநில உரிமைகளைக் காப்பதில் கேரள முதல்வர் பினராயி விஜயன் சிங்கம் போல் செயல்படுவதாகவும் தமக்கு வழிகாட்டும் முதல்வராக பினராயி விஜயன் திகழ்வதாகவும் அவர் குறிப்பிட்டார்.

